புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோ மறைவு.. வட கொரியா 3 நாள் துக்கம் அனுசரிப்பு
புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோ மறைவிற்கு வட கொரியா 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கிறது.
பியாங்யங்: கியூபாவின் முன்னாள் அதிபரும் புரட்சியாளருமான பிடல் காஸ்ட்ரோவின் மறைவிற்கு, 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் வடகொரியா நாடு அறிவித்துள்ளது.
கியூபாவின் முன்னாள் அதிபராக இருந்தவர் பிடல் காஸ்ட்ரோ. புரட்சியாளரான இவர், 90 வயதான நிலையில் நேற்று முன் தினம் கியூபாவில் காலமானார். இவரது உடல் நேற்று தகனம் செய்யப்பட்டு பின்னர், அவரது சாம்பல் அந்நாட்டின் முக்கிய நகரங்களில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று வட கொரியா பிடல் காஸ்ட்ரோவின் மறைவிற்கு 3 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. அதன்படி, பிடல் காஸ்ட்ரோவின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் அரசு அலுவலகங்களின் வெளியே வட கொரியாவின் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். வரும் புதன்கிழமை வரை காஸ்ட்ரோவின் மறைவுக்கு வட கொரியாவில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
முன்னதாக, பிடல் காஸ்ட்ரோ உயிரிழந்த செய்தி அறிந்த உடன் வட கொரிய அரசு சார்பாக இரங்கல் செய்தி பிடல் காஸ்ட்ரோவின் சகோதரர் ரவுல் காஸ்ட்ரோவுக்கு தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.