எங்ககிட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் இருக்கு -கொந்தளிக்கும் வடகொரியா
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் எங்களிடம் உள்ளன, அவை மீண்டும் சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளன என்று வடகொரிய ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சியோல்: ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் பாதுகாப்பு பரிசோதனையை அமெரிக்கா நேற்று நடத்தியுள்ள நிலையில், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வடகொரியா சோதிக்க இருப்பதாக ஊடகங்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளன.
ஒரே ஓராண்டில் மற்றும் சுமார் 9 ஏவுகணைகளை வடகொரியா பரிசோதனை செய்துள்ளது. அமெரிக்கா, தென்கொரியா மற்றும் ஐ.நா சபை ஆகியவை கண்டனங்கள் தெரிவித்தும் வடகொரியா தனது சோதனைகளை நிறுத்தாமல் அடிக்கடி செய்துவந்தது. இதனால், கொரிய தீபகற்பத்தில் ஏற்பட்ட பதற்ற நிலை நீண்டகாலம் நீடித்து வருகிறது. வடகொரியாவை சமாளிக்கும் விதமாக ஏவுகணைகளை இடைமறித்து தாக்கி அழிக்கும் பரிசோதனையை அமெரிக்கா நேற்று நடத்தியுள்ளது.
கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெற்ற இந்த சோதனையின் போது, பசுபிக் பெருங்கடலில் உள்ள ஒரு தீவிலிருந்து ஏவப்பட்ட மாதிரி ஏவுகணை இடைமறித்து அழிக்கப்பட்டது. இந்த சோதனை வெற்றிகரமாக நடைபெற்றதாக பெண்டகன் அறிவித்துள்ளது.
மேலும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை இடைமறித்து தாக்கி அழிக்கும் சோதனையை அமெரிக்கா முதன் முறையாக வெற்றிகரமாக நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், அமெரிக்கா பரிசோதனை நடத்தியுள்ள ஒரே நாளில் வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை பரிசோதிக்க இருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளது.