திடீர் மனமாற்றம்.. அணு ஆயுதங்களை கைவிட முடிவு செய்த கிம் ஜாங்.. அமெரிக்காவிற்கு நட்பு அழைப்பு!
வட கொரியா நாடு அணு ஆயுதங்களை கைவிட முடிவு செய்து இருப்பதாக அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் தெரிவித்துள்ளார்.
Recommended Video
நியூயார்க்: வட கொரியா நாடு அணு ஆயுதங்களை கைவிட முடிவு செய்து இருப்பதாக அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் தெரிவித்துள்ளார்.
ஆச்சர்யமாக இதற்காக அவர் அமெரிக்காவின் உதவியை கோரியுள்ளார். அதன்படி அமெரிக்கா, வடகொரியா இருவரும் ஒப்பந்தம் செய்து அணு ஆயுதங்களை கைவிட வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
அதிபரின் செய்தி தொடர்பாளர்கள், வெள்ளை மாளிகைக்கு அனுப்பிய கடிதத்தில் இந்த தகவல் இருப்பதாக கூறப்படுகிறது. இரண்டு நாட்டு அதிபர்களும் சில நாட்களில் சந்திக்க இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அணுஆயுத சண்டை
புத்தாண்டு அன்று வடகொரியா அதிபர் கிம் ''என்னுடைய மேசை மீது ஒரு அணு ஆயுத ஸ்விட்ச் பொருத்தி வைத்து இருக்கிறார்கள். அதை அழுத்தி உலகின் எந்த நாட்டை வேண்டுமானாலும் என்னால் தாக்க முடியும்'' என்றார். இதற்கு பதிலளிக்கும் வகையில் டிரம்ப் ''என்னுடைய மேசையில் அதைவிட பெரிய பட்டன் இருக்கிறது. அந்த பட்டன் உங்களுடையதை விட பெரிதாக இருக்கும், அதைவிட சக்தியும் அதிகமாக இருக்கும்.'' என்று குறிப்பிட்டார்.
இருவரும் சந்திப்பு
ஆனால் இவர்களுக்கு இடையில் இருக்கும் பிரச்சனை மறைந்து தற்போது அமெரிக்க அதிபர் டிரம்ப்பும், வட கொரிய அதிபர் கிம் ஜாங்கும் இன்னும் சில தினங்களில் சந்திக்க இருக்கிறார்கள். ஆனால் அதற்கான தேதி, இடம் இன்னும் குறிக்கப்படவில்லை. அமெரிக்க, கொரிய பிரச்சனை இதில் தீர்க்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் இதுகுறித்து தகவல்களை தெரிவிக்காமல் இரண்டு நாடுகளும் ரகசியமாக வைத்துள்ளது.
சோதனை
இதையடுத்து இனி அணு ஆயுத சோதனை நடந்த போவதில்லை என்று கிம் அறிவித்து இருந்தார். ஆனால் இது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்றாலும், வடகொரியா பாதுகாப்பு அதிகாரிகள் கிம் அந்த முடிவில்தான் இருக்கிறார் என்று கூறினார்கள். இந்த இரண்டு விஷயங்களும் மக்கள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
கைவிட முடிவு
தற்போது சோதனை செய்வது மட்டுமில்லாமல் அணு ஆயுதங்களை மொத்தமாக கைவிட வடகொரியா முடிவு செய்துள்ளது. அதன்படி இனி புதிதாக அணு ஆயுத சோதனை நடத்த கூடாது, ஆணு ஆயுத தயாரிப்பு செய்ய கூடாது என நிறைய கட்டுப்பாடுகள் விதித்துக் கொள்ள இருக்கிறார்கள். அமெரிக்காவிடம் இது குறித்து அவர்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.