அணு ஆயுதங்களை மொத்தமாக கைவிடும் வடகொரியா.. கிம் ஜாங் அதிரடி முடிவு!
வட கொரியா நாடு அணு ஆயுதங்களை மொத்தமாக கைவிட முடிவு செய்து இருப்பதாக அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் தெரிவித்துள்ளார்.
பியாங்யாங்: வட கொரியா நாடு அணு ஆயுதங்களை மொத்தமாக கைவிட முடிவு செய்து இருப்பதாக அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக வடகொரியா அதிபர் கிம் ஜாங் மொத்தமாக மாறி இருக்கிறார். சில வாரம் முன்பு வரை அமெரிக்க முதற்கொண்டு உலக நாடுகள் மொத்தத்தையும் அணு ஆயுதம் மூலம் மிரட்டிக் கொண்டு இருந்தார்.
பல நாட்டு ஊடகங்கள், அவர்களது மொழியில் இவரை குழந்தை, குழந்தை சாமி என்றெல்லாம் கூட கலாய்த்து கொண்டு இருந்தனர். இந்த நிலையில் தற்போது உண்மையாகவே, அவர் தனக்குள் இருக்கும் குழந்தைதனத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். மொத்தமாக அணு ஆயுதங்களை கைவிடும் முடிவை எடுத்துள்ளார்.
இரண்டு நாடுகள்
இரண்டு நாட்களுக்கு முன்புதான் வடகொரியா அதிபரும் தென்கொரிய அதிபரும் ஒன்றாக சந்தித்துக் கொண்டார்கள். இரண்டு அதிபர்களும் ஒரு காலடி எடுத்து வைத்து, இரண்டு நாட்டு எல்லைகளையும் கடந்து புதிய வரலாறு படைத்தார்கள். இதனால் 60 வருடமாக வடகொரியாவிற்கும், தென்கொரியாவிற்கும் இடையில் நடந்து வந்த சண்டை எல்லாம் முடிவுக்கு வந்து இருக்கிறார். குளிர்கால ஒலிம்பிக் போட்டியிலேயே இதற்கான சுவடுகள் தெரிந்தது.
மிரட்டினார்
கடந்த ஜனவரி மாதம் வரை இவர் அனைத்து நாடுகளையும் அணு ஆயுதங்களால் மிரட்டி வந்தார். அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் மோதல் போக்கை கடைபிடித்தார். ஆனால் தற்போது கடந்த இரண்டு மாதமாக மொத்தமாக அவர் தனது குணத்தை மாற்றி இருக்கிறார். தற்போது அமெரிக்க அதிபர் டிரம்ப்பும், அதிபர் கிம் ஜாங்கும் ஒன்றாக சந்திக்கும் அளவிற்கு தோஸ்து படா தோஸ்த் ஆகியுள்ளனர்.
அணு ஆயுதம் கைவிட முடிவு
இந்த நிலையில்தான் அவர் அணு ஆயுதங்களை கைவிட முடிவு செய்துள்ளார். இப்போது இருக்கும் ஆயுதங்களை மட்டும் அவர் பாதுகாப்பிற்க்காக வைத்து இருக்கிறார். இனி புதிய ஆயுதங்களை உருவாக்க மாட்டார்கள். அதேபோல்., இனி முதற்கொண்டு அந்த நாடு புதிய அணு ஆயுத சோதனைகளை நிகழ்த்தாது. அணு ஆயுத சோதனை நிகழ்த்தும் பகுதிகளை இடித்து தள்ள முடிவு செய்துள்ளது. ஏற்கனவே ஒரு அணு ஆயுத தளம் இடிக்கப்பட்டு இருக்கிறது.
யார் முன்னிலையில்
இதை ஐநா சபை மற்றும் அமெரிக்கா முன்னிலையில் நடந்த அதிபர் கிம் ஜாங் முடிவு செய்து இருக்கிறார். ஜனவரி வரை வில்லனாக இருந்த அதிபர் கிம் ஜாங், ஒரே மாதத்தில் எப்படி மனம் மாறினார் என்று யாருக்கும் தெரியவில்லை. இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்று கூட சிலர் சொல்ல தொடங்கி இருக்கிறார்கள். இவரது மனமாற்றத்திற்கு பின் யார் இருந்தாலும், அவர்கள் இந்த உலக அமைதிக்கு பெரிய நன்மை செய்து இருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.