கொரோனா ஊடுருவலையே ஒட்டுமொத்தமாக தடுத்துவிட்டோம்... சொல்றது வேற யாரு.. வடகொரியா கிம் ஜாங்தான்!
பியாங்யாங்: கொரோனாவை ஒட்டுமொத்தமாக கட்டுப்படுத்திவிட்டதாக கொக்கரித்திருக்கிறார் வடகொரியா அதிபர் கிம் ஜாங்.
உலகின் இரும்புத்திரை நாடாக சர்வாதிகார வடகொரியா இருந்து வருகிறது. உலகையே கொரோனா பேரழிவுக்குள்ளாக்கி வருகிறது. ஆனால் வடகொரியா நிலவரம்தான் என்ன என்பது யாருக்கும் தெரியாது.;
அதேநேரத்தில் செய்தி நிறுவனங்கள் கொரோனா பரவல் தொடக்கம் முதலே வடகொரியாவின் பல்வேறு நடவடிக்கைகளை வெளியிட்டு வந்தன. ஜனவரி மாதத்திலேயே விமானப் போக்குவரத்தை வடகொரியா நிறுத்தி பல்லாயிரக்கணக்கானோரை தனிமைப்படுத்தியது என்றன அந்த செய்திகள்.
இந்த நிலையில் ஆளும் கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் கிம் ஜாங் பேசுகையில், வடகொரியாவுக்குள் கொரோனா நுழையவிடாமல் வெற்றிகரமாகவே தடுத்துவிட்டோம் என கூறியுள்ளார். இருப்பினும் தொடர்ந்தும் முன்னெச்சரிக்கையுடன் இருந்து கொரோனாவை தடுத்து நிறுத்துவோம் எனவும் கிம் ஜாங்கூறியிருக்கிறார்.
இருப்பினும் வடகொரியாவின் இரும்பு கதவுகள் திறக்கப்படும் நிலையில்தான் கொரோனா ஒழிந்ததா? கோரத்தாண்டவமாடியதா? என்பது தெரியவரும் என்கின்றனர் அரசியல் வல்லுநர்கள்.