அணு ஆயுத சோதனையால் 200 பேர் செத்தாங்களா? இல்லவே இல்லை.. சத்தியம் செய்யும் வடகொரியா
அணு ஆயுத சோதனை மையத்தில் விபத்து என வெளியான செய்திக்கு வடகொரியா மறுப்பு தெரிவித்துள்ளது.
பியாங்ஜியாங்: அணு ஆயுத சோதனை மையத்தில் விபத்து என வெளியான செய்தியை வடகொரியா மறுத்துள்ளது.
வடகொரியா உலக நாடுகளின் எதிர்ப்பையும் அடிக்கடி அணு ஆயுத சோதனையை நடத்தி வருகிறது. இதனால் வடகொரியா மீது ஐநா பொருளாதார தடையைவிதித்துள்ளது.
இதனால் ஆத்திரமடைந்துள்ள வடகொரியா தனது அணு ஆயுத சோதனையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. அதேநேரத்தில் தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளை மிரட்டும் வகையில் ராணுவ விமானங்களையும் பறக்கவிட்டு அச்சுறுத்தி வருகிறது.
ஆறாவது முறையாக சோதனை
அமெரிக்க உள்ளிட்ட உலக நாடுகளின் கடும் எதிர்ப்புகளையும் மீறி அணுஆயுத சோதனைகளை நடத்தி வரும் வடகொரியா கடநத் செப்டம்பர் 3ஆம் தேதி ஆறாவது முறையாக மிகப்பெரிய நிலத்தடி அணுகுண்டு சோதனையை நடத்தியது. இதனால் ஏற்பட்ட சுரங்க விபத்தில் 200 பேர் பலியானதாக ஜப்பான் நாட்டின் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டது.
இரு அணுகுண்டுகள் சோதனை
இது குறித்து ஜப்பானின் அசாகி செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், செப்டம்பர் 3 ஆம் தேதி, வடகொரியா 6.3 ரிக்டர் அளவிலும் அதைத் தொடர்ந்து 4.3 ரிக்டர் அளவிலும் பூகம்பத்தை ஏற்படுத்தக்கூடிய சக்திகொண்ட இரு அணுகுண்டுகளைச் சோதனை செய்ததாக கூறியது.
120 கிலோ டன் எடை
அவை ஹிரோஷிமாவில் வீசப்பட்டதைக் காட்டிலும் 8 மடங்கு சக்தி வாய்ந்தவை. மேலும் 120 கிலோ டன் எடைகொண்டது என்றும் அந்த செய்தி நிறுவனம் தெரிவித்தது.
சுரங்கவிபத்தில் 200 பேர் பலி
இதனால் புங்கியாரி மலைப் பகுதியில் அணுகுண்டுச் சோதனை நடத்தும் சுரங்கம் இடிந்துவிழுந்ததில் சுமார் 200 பேர் கொல்லப்பட்டனர். முதலில் 100 பேர் பலியான நிலையில், அதனை தொடர்ந்து நடைபெற்ற மீட்பு பணிகளின் போது மீண்டும் ஒருமுறை சுரங்கத்தில் மண் சரிந்து விபத்து ஏற்பட்டது. இதில் மேலும் 100 பேர் என மொத்தம் 200 பேர் பலியாகியுள்ளதாக ஜப்பான் செய்தி நிறுவனம் தெரிவித்தது.
வடகொரிய அரசு ஊடகம் மறுப்பு
ஆனால் இதனை வடகொரியா தடாலடியாக மறுத்துள்ளது. வடகொரியாவின் 6-வது அணு ஆயுத சோதனையின் போது பலர் உயிரிழந்துவிட்டதாக வெளியான செய்தியை வடகொரியா அரசு ஊடகம் மறுத்து உள்ளது.
நவீன நிலையில் வடகொரியா
மேலும் அணுஆயுத சோதனை தொடர்பான வெளியான செய்திகள் தவறானவை என்றும் எங்களுடைய நாட்டிற்கு எதிராக அவதூறு பரப்புவதற்கான செய்தி என்றும் வடகொரியா கூறியுள்ளது. மேலும் வடகொரியா அணு ஆயுத மேம்பாட்டில் நவீன நிலையில் உள்ளது என தெரிவித்து உள்ளது.