விடிந்தும் விடியாமலும் வடகொரியா நடத்திய ஏவுகணை சோதனை தோல்வி
சியோல்: வட கொரியா இன்று அதிகாலை மேற்கொண்ட ஏவுகணை சோதனை தோல்வி அடைந்துள்ளது.
வடகிழக்கு ஆசிய நாடுகளான வடகொரியாவும், தென்கொரியாவும் தங்களின் ஆயுத பலத்தை காட்ட போட்டி போடுகின்றன. வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் நடத்துவதில் ஆர்வமாக உள்ளது.
உலக நாடுகள், ஐ.நா. ஆகியவற்றின் எச்சரிக்கையையும் மீறி வட கொரிய அதிபர் கிம் ஜோங் யுன் அணு ஆயுதங்கள், ஹைட்ரஜன் குண்டுகளை தாங்கிச் சென்று வெகுதொலைவில் உள்ள இலக்கை தாக்கும் ஏவுகணைகளை தொடர்ந்து சோதனை செய்து வருகிறார். அண்மையில் பேரழிவை ஏற்படுத்தும் ஹைட்ரஜன் குண்டை சோதனை செய்து உலக மக்களை அதிர வைத்தார்.
இந்நிலையில் இன்று அதிகாலையும் வடகொரியா ஏவுகணை சோதனை மேற்கொண்டது. ஆனால் அந்த சோதனை தோல்வி அடைந்துள்ளதாக தென் கொரியா தெரிவித்துள்ளது.
வடகொரியா ஏவுகணை ஏவினால் அதை கண்டுபிடித்து அழிக்கும் கருவியை கிழக்கு கடலில் பொருத்தியுள்ளது தென் கொரிய ராணுவம் என்பது குறிப்பிடத்தக்கது.