வட கொரியா-தென் கொரியா பேச்சுவார்த்தை தொடங்கியது... கொரிய தீபகற்பத்தில் அமைதி திரும்புமா?
இரண்டு வருட இடைவேளைக்கு பின்னர், இன்று வடகொரியா மற்றும் தென் கொரியா அதிகாரிகள் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
பன்முன்ஜோம்: வடகொரியா - தென்கொரியா எல்லையில் உள்ள பொதுவான பகுதியில் இருநாட்டு அதிகாரிகளும் இன்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
சமீப காலமாக தொடர் ஏவுகணை சோதனைகள், அணு ஆயுத சோதனைகள், அச்சுறுத்தும் அறிக்கைகள் என மோசமான போக்கை கடைபிடித்து வரும் வடகொரியாவின் மீது உலக நாடுகள் கடும் அதிருப்தியில் உள்ளன. அண்டை நாடான தென் கொரியாவையும் வடகொரியா தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது.
இந்நிலையில், வடகொரிய சர்வாதிகாரி கிம் ஜாங் உன், புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறி உரையாற்றிய போது, தென் கொரியாவில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டிகள் குறித்து அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த விருப்பம் தெரிவித்தார்.
ஏற்கனவே, இந்த குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டிகளை, அமைதிக்கான அடையாளமாக நடத்த தென் கொரியா திட்டமிட்டு வந்த நிலையில், வடகொரியாவின் அழைப்புக்கு உடனே இசைந்தது. இரு நாடுகளின் எல்லைக்கு அருகே உள்ள பன்முன்ஜோம் என்ற பகுதியில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. கடைசியாக இரண்டு ஆண்டுகளுக்கு முன், இங்கு பேச்சுவார்த்தை நடைபெற்றது.
வடகொரிய ஒலிம்பிக்ஸ் வீரர்கள் மற்றும் அவர்களுக்கு செய்து கொடுக்கப்படும் வசதிகள் குறித்து இந்த பேச்சுவார்த்தையில் பேசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பேச்சுவார்த்தை தொடர்வதால் 2000, 2004 மற்றும் 2006 ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக்ஸ் மற்றும் குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டிகள் போல, இதிலும், இரண்டு நாட்டின் வீரர், வீராங்கனைகள் சேர்ந்தே நடந்து வருவது குறித்தும் வடகொரியா கோரிக்கை வைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.