சூப்பர் லார்ஜ் ராக்கெட்.. வடகொரியா செய்த அதிரடி சோதனை வெற்றி.. மீண்டும் வேலையை காட்டும் கிம்!
பியாங்யாங்: வடகொரியா சூப்பர் லார்ஜ் ராக்கெட் என்ற நவீன ரக ஏவுகணையை நேற்று சோதனை செய்துள்ளது.
வடகொரியா தற்போது மீண்டும் தீவிரமாக தனது ஆயுதங்களை பரிசோதனை செய்ய தொடங்கி உள்ளது. முக்கியமாக அதிக சக்தி கொண்ட ராக்கெட்டுகளை வடகொரியா பரிசோதிக்க தொடங்கி இருக்கிறது.
அமெரிக்கா உடன் மீண்டும் மோதல் போக்கை வடகொரியா கடைபிடிக்க தொடங்கி உள்ளது. தென் கொரியாவுடன் இருக்கும் பிரச்சனை காரணமாக நாளுக்கு நாள் இந்த அங்கு பதற்றநிலை அதிகரித்து வருகிறது.
எப்படி தொடக்கம்
இந்த வருட தொடக்கத்தில் வடகொரியா மற்றும் அமெரிக்கா இடையில் பெரிய அளவில் சண்டை நிலவி வந்தது. ஆனால் போக போக இது சரியாகி இரண்டு நாட்டு தலைவர்களும் நேரில் சந்தித்துக்கொண்டார்கள். இதில் நிறைய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. அதேபோல வடகொரியா தென்கொரியா பிரச்சனையும் சரியானது.
ஆனால் என்ன
ஆனால் கடந்த மாதம் திடீர் என்று மீண்டும் அமெரிக்கா தென்கொரியா மற்றும் வடகொரியா இடையே பிரச்சனை வந்தது. அமெரிக்கா தென்கொரியா இரண்டு நாடுகளும் இணைந்து ஆயுத பயிற்சியில் ஈடுப்பட்டது. கடலோரத்தில் இரண்டு நாடுகளும் போர் பயிற்சி செய்தது. இது வடகொரியாவை சீண்டியது.
இறங்கி உள்ளது
இதனால்தான் வடகொரியா தற்போது மீண்டும் தீவிரமாக தனது ஆயுதங்களை பரிசோதனை செய்ய தொடங்கி உள்ளது. தென்கொரியாவுடன் இனி அமைதி பேச்சுவார்த்தை கிடையாது என்று வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் அறிவித்தார்.அதேபோல் கடந்த வாரம் இரண்டு புதிய ரக வித்தியாசமான ஏவுகணைகளை விண்ணில் ஏவி வடகொரியா சோதனை செய்தது.
மீண்டும் சோதனை
இந்த நிலையில் தற்போது வடகொரியா சூப்பர் லார்ஜ் ராக்கெட் என்ற நவீன ரக ஏவுகணையை சோதனை செய்துள்ளது. இது மிகவும் சக்தி வாய்ந்த ஏவுகணை என்று கூறப்படுகிறது. மொத்தம் இரண்டு ஏவுகணைகளை வடகொரியா இப்படி சோதனை செய்துள்ளது. உலக நாடுகளை இந்த சோதனை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.