தலைவிரித்தாடும் உணவு பஞ்சம்.. வறட்சியின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கும் வடகொரியா
சியோல்: வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு வட கொரியநாட்டில் உணவு பஞ்சம் தலைவிரித்தாடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 37 வருடங்களில் இந்த வருடத்தில் தான் அதிக வறட்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அதிகாரப்பூர்வ செய்தி ஒன்றை வெளியிட்டுள்ள கொரிய மத்திய செய்தி நிறுவனம், நாடு முழுவதும் இந்த ஆண்டின் முதல் 5 மாதங்களில் சராசரியாக 54.4 மில்லி மீட்டர் மழை மட்டுமே பெய்துள்ளது. இது 1982-ம் ஆண்டுக்கு பிறகு பதிவாகியுள்ள குறைந்தபட்ச மழை அளவாகும். இதே காலத்தில் வட கொரியாவில் சராசரியாக 51.2 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளதாக அந்த செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
மழையளவு மிகவும் குறைந்துவிட்டதால் வட கொரியாவைச் சேர்ந்த 10 மில்லியனுக்கும் அதிகமானோர் கடுமையான உணவு பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐநா ஆய்வறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு நாளொன்றுக்கு ஒருவர் 300 கிராம் உணவை மட்டுமே சாப்பிட்டு உயிர் வாழ்வதாகவும் ஐ.நா அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மிக மோசமான அறுவடை காலமாக நடப்பாண்டு இருப்பதாக வடகொரிய அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் அவசர உணவுத்தேவையை எதிர் நோக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்துள்ள வடகொரிய அதிகாரிகள் சிலர், மோசமான வானிலை மற்றும் சர்வதேச பொருளாதாரத் தடைகளின் காரணமாகவே கடும் உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
சமீபத்திய ஆண்டுகளில் நாட்டில் நடத்தப்பட்ட தொடர் உயர்மட்ட அணுசக்தி மற்றும் ஏவுகணை சோதனைகளால் உணவு பஞ்சம் மேலும் கடுமையாகியுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர். இந்த வறட்சி மற்றும் உணவு பற்றாக்குறையானது மே மாதம் இறுதி வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
மேலும் விவசாயத்தில் ஏற்பட்டுள்ள இழப்பை சரி செய்ய தீவிர முயற்சியில் வடகொரியா ஈடுபட்டுள்ளது அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்கள் புதிய நீர் ஆதாரங்களை கண்டுபிடித்து விவசாயத்தை மீண்டும் மேம்படுத்தும் முயற்சிகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர்
கடந்த 1990-ம் ஆண்டில் வட கொரியாவில் ஏற்பட்ட கடும் பஞ்சத்தினால் ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்தது நினைவுக்கூறத்தக்கது