இது எவ்வளவு பெரிய கேவலம் தெரியுமா... பைசரின் தடுப்பூசி தெழில்நுட்பத்தை திருட முயன்ற வடகொரியா
சியோல்: அமெரிக்காவின் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி தொழில்நுட்பத்தை வட கொரியா திருட முயன்றதாக பரபரப்பு குற்றச்சாட்டை தென் கொரிய எம்பிகள் முன் வைத்துள்ளனர்.
உலகின் பல்வேறு நாடுகளிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பைத் தடுக்க பல்வேறு நாடுகளும் தங்கள் மக்களுக்கு தடுப்பூசி அளிக்கும் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன.
அமெரிக்கா, பிரிட்டன், மெக்சிகோ உள்ளிட்ட பெரும்பாலான நாடுகள் பைசர் நிறுவனத்தின் தடுப்பூசிக்கே ஒப்புதல் அளித்துள்ளன. பைசர் தடுப்பூசி சுமார் 95% வரை பலன் அளிப்பதால் பெரும்பாலான நாடுகள் பைசர் நிறுவனத்தை நோக்கியே திரும்பியுள்ளன.
திருட முயற்சி
உலகளவில் தேவை அதிகரித்துள்ளதால் பைசர் தடுப்பூசியை அனைத்து நாடுகளுக்கும் சரியான நேரத்தில் டெலிவரி செய்வதில் சிக்கல் எழுந்துள்ளது. இந்நிலையில், அமெரிக்காவின் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி தொழில்நுட்பத்தை வட கொரியா திருட முயன்றதாகப் பரபரப்பு குற்றச்சாட்டை தென் கொரியா முன்வைத்துள்ளது. பைசரின் கொரோனா தடுப்பூசி மற்றும் சிகிச்சை ஆகியவை குறித்த தகவல்களை திருட வடகொரிய முயன்றுள்ளது.
ஹேக்கிங்
இதற்காக பைசர் நிறுவனத்தின் சர்வர்களை வட கொரியா ஹேக் செய்ய முயன்றதாக தென் கொரியா நாட்டை சேர்ந்த எம்பி ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தென் கொரியாவின் தேசிய புலனாய்வு நிறுவனம் இத்தகவலை உறுதி செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். முன்னதாக, கடந்தாண்டு நவம்பர் மாதம், அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளும் முக்கியமான ஆறு மருந்து நிறுவனங்களை வட கொரியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளிலிருந்து ஹேக்கர்கள் ஹேக் செய்ய முயல்வதாக மைக்ரோசாப்ட் நிறுவனமும் தெரிவித்திருந்தது.
வட கொரியா - சீனா
அணு ஆயுத சோதனை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் வட கொரியா மீது பெருளாதார தடை விதித்துள்ளன. சீனா மட்டுமே வடகொரியாவுக்கு ஆதரவாக இருந்தது. அந்நாட்டுடன் தொழில் செய்யும் முக்கிய நிறுவனமாகவும் சீனாவே இருந்தது. இந்தச் சூழ்நிலையில் கொரோனா பரவல் காரணமாகச் சீனா உள்ளிட்ட அனைத்து உலக நாடுகள் உடனான போக்குவரத்திற்கு வட கொரியா தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கொரோனா தடுப்பு மருந்து
வட கொரியாவில் இதுவரை எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது, எத்தனை போர் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளனர் என்பது போன்ற தகவல்களை அந்நாடு இதுவரை வெளியிடவில்லை. இருப்பினும், தடுப்பூசி பணிகளை தொடங்க சுமார் 20 லட்சம் ஆக்ஸ்போர்ட் தடுப்பூசி டோஸ்களுக்கு வடகொரியா ஆர்டர் அளித்துள்ளது. அதேபோல உலக சுகாதார அமைப்பின் கோவாக்சின் திட்டத்தின் கீழும் சுமார் 19 லட்சம் தடுப்பூசிகள் வட கொரியாவுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.