கிம்-ன் சிங்கப்பூர் பயணத்தை உடனுக்குடன் 'முதல் முறையாக' ஒளிபரப்பிய வடகொரிய அரசு ஊடகங்கள்!
Recommended Video
பியோங்யாங்: வடகொரியா அதிபர் கிம்மின் வெளிநாட்டு பயணங்களை அவர் நாடு திரும்பிய பின்னர்தான் அந்நாட்டு அரசு ஊடகங்கள் ஒளிபரப்பும். ஆனால் சிங்கப்பூர் பயணத்தை உடனுக்குடன் வடகொரியா அரசு ஊடகங்கள் வெளியிட்டது முக்கியமான மாற்றமாக பார்க்கப்படுகிறது.
வடகொரியா அதிபராக பதவியேற்றது முதல் 6 ஆண்டுகாலம் எந்த ஒரு வெளிநாட்டுக்கும் கிம் சென்றது இல்லை. வெளிநாடு சென்றால் எங்கே ஆட்சி கவிழ்க்கப்படுமோ என்கிற அச்சத்தில் இருந்தார் கிம்.
இதன் பின்னர் சீனா, தென்கொரியா நாடுகளுக்கு கிம் பயணம் மேற்கொண்டார். இந்த பயணங்களை முடித்துக் கொண்டு கிம் நாடு திரும்பிய பின்னரே வடகொரியா அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வந்தன.
கிம்மின் பாதுகாப்பை கருதி இத்தகைய நடைமுறையை வடகொரியா அரசு ஊடகங்கள் பின்பற்றி வந்தன. ஆனால் சிங்கப்பூரில் நடைபெற்ற அமெரிக்கா அதிபர் ட்ரம்ப்புடனான கிம்மின் சந்திப்பு குறித்த செய்திகளை வடகொரியா அரசு ஊடகங்கள் அவர் சிங்கப்பூரில் இருக்கும் போதே ஒளிபரப்பியது.
வடகொரியா அச்சு ஊடகங்களிலும் பிரதான தலைப்புச் செய்தியாக ட்ரம்ப்-கிம் சந்திப்பு இடம்பெற்றிருந்தது. வடகொரியா ஊடகங்களின் அணுகுமுறையில் ஏற்பட்டிருக்கும் இந்த மாற்றங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருதப்படுகிறது.