ஜெர்மனி கடற்கரையில் அடுத்தடுத்து இறந்து கரை ஒதுங்கும் திமிங்கலங்கள்.. இதுவரை 23 பலி
லண்டன்: ஜெர்மன் கடற்கரையில் மேலும் 8 திமிங்கலங்கள் இறந்து கரை ஒதுங்கிய சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே ஆழந்தலை கடற்கரை பகுதியில் சுமார் 300 கிலோ முதல் ஆயிரம் கிலோ எடை கொண்ட 81 திமிங்கலங்கள் கரை ஒதுங்கின. ராட்சத திமிங்கலங்கள் கரை ஒதுங்கியது குறித்து மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர்.
அத்துடன் திமிங்கலங்களை கடலுக்குள் திருப்பி விடும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் பெரும்பாலான திமிங்கலங்கள் மணற்பரப்புக்கே திரும்பி வந்து இறந்தன. இதேபோல், மும்பை ஜூஹு கடற்கரையிலும் 30 அடி நீள திமிங்கலம் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது.
அதிர்ச்சி...
அடுத்தடுத்து இந்தியக் கடற்கரையில் திமிங்கலங்கள் கரை ஒதுங்கிய நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள், 'இந்திய கடற்பகுதியில் என்ன நடக்கிறது என்று ஆராய்ச்சி செய்து இந்திய அரசு தெரிவிக்க வேண்டும்' என்று வலியுறுத்தியுள்ளனர்.
இங்கிலாந்தில்...
இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து கடற்கரையில், மெகா சைஸ் திமிங்கலங்கள் இறந்து கரை ஒதுங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் இங்கிலாந்தின் கிழக்குக் கடற்கரை நகரமான ஸ்கீக்நெஸ் கரையில், 48 அடி நீளமுள்ள 3 திமிங்கலங்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கின. இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மெகா சைஸ் திமிங்கலங்கள்...
தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து, அவற்றை கிரேன்கள் மூலம் அப்புறப்படுத்தினர். ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து மெகா சைஸ் திமிங்கலங்களை பார்வையிட்டுச் சென்றனர்.
ஜெர்மனியிலும்...
இந்நிலையில் தற்போது ஜெர்மன் கடற்கரையில் எட்டு திமிங்கலங்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஐரோப்பாவின் தெற்கு கடற்கரைப் பகுதியில் கரை ஒதுங்கிய திமிங்கலங்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது.
சமூக விரோதிகள்...
கரை ஒதுங்கிய திமிங்கலங்கள் அனைத்தும் ஏறக்குறைய ஒரே வயதையொத்தவை எனக் கூறப்படுகிறது. அவற்றின் பற்களை சமூக விரோதிகள் சிலர் திருட முயற்சித்ததும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அதிக எடை...
இந்த வகை திமிங்கலத்தின் பற்கள் 20 மீட்டர் நீளமானவை. சுமார் 50 டன் எடை கொண்டவை.
பாதை மாறும் திமிங்கலங்கள்...
இனப்பெருக்கத்திற்காக அண்டார்டிகா கடல் பகுதிக்கு இடம் பெயரும் திமிங்கலங்கள், பாதை மாறி எதிர்பாராத விதமாக இவ்வாறு கரை ஒதுங்குவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
கழிவுகளே காரணம்...
ஆனால், கடலில் ஏற்படும் வெப்பநிலை மாற்றம் மற்றும் கொட்டப்படும் கழிவுகளால் இவ்வாறு திமிங்கலங்கள் கரை ஒதுங்குவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.