தீயாய் பரவும் புதிய கொரோனா.. இங்கிலாந்தைத் தொடர்ந்து.. வடக்கு அயர்லாந்திலும் பரவியது!
பெல்ஃபாஸ்ட்: பிரிட்டன் நாட்டில் கடந்த சில நாள்களுக்கு முன் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இதன் காரணமாக பல்வேறு நாடுகளும் பிரிட்டன் நாட்டிலிருந்து வரும் விமானங்களை ரத்து செய்துள்ளன.
இருப்பினும், இடைப்பட்ட காலத்தில் இந்த புதிய வகை கொரோனா மற்ற நாடுகளுக்குப் பரவியிருக்குமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது. ஏற்கனவே, ஆஸ்திரேலியாவில் இந்த புதிய வகை கொரோனா கண்டறியப்பட்டிருந்தது.
இந்நிலையில், வட அயர்லாந்திலும் இந்தப் புதிய வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இத்தகவலை வட அயர்லாந்து சுகாதாரத் துறை உறுதி செய்துள்ளது.
மேலும், இது குறித்து வட அயர்லாந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தப் புதிய வகை கொரோனா வைரஸ் நீண்ட காலமாகப் பிரிட்டனில் இருந்திருக்கலாம். இந்தப் புதிய வகை நோய் பாதிப்பையோ இறப்பு விகிதத்தையோ அதிகப்படுத்துவதில்லை. மேலும், தடுப்பு மருந்துகள் இந்த புதிய வகை கொரோனாவுக்கு கட்டுப்படாது என்று பரவும் தகவலுக்கு எந்த ஆதாரமும் இல்லை.
எங்க தடுப்பு மருந்தின் தாக்கம் ஓர் ஆண்டு வரை இருக்கும்... இந்திய நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு
வைரஸ் இவ்வாறு தன்னை தானே மாற்றிக்கொள்வது வழக்கத்திற்கு மாறான நடவடிக்கை இல்லை. இருப்பினும், இந்த வகை கொரோனா மற்ற வகைகளைவிட மிக வேகமாகப் பரவுகிறது. இதுவே கவலையளிக்கும் செய்தி" என்று தெரிவித்துள்ளது.
இந்தப் புதிய வகை கொரோனா மற்ற வகைகளைவிட 70% வேகமாகப் பரவுவதாகப் பிரிட்டன் சுகாதாரத் துறை தெரிவித்திருந்தது. மேலும், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கிறிஸ்துமஸ் தினத்திற்குப் பிறகு ஆறு வாரங்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அதிகரிக்கப் பிரிட்டன் அரசு திட்டமிட்டுள்ளது.