நார்வே செஸ்: உலக சாம்பியன் கார்ல்சனை அபாரமாக வீழ்த்தினார் விஸ்வநாதன் ஆனந்த்!
ஓஸ்லோ: நார்வே செஸ் போட்டித் தொடரில், நடப்பு உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த். இந்த வெற்றியால் ஆனந்த் 3வது இடத்துக்கு முன்னேறிய நிலையில், கார்ல்சன் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டார்.
முதல் 3 போட்டிகள் டிரா ஆன நிலையில், ஆனந்த் மிகவும் ஆக்ரோஷமான வகையிலும், சாதுர்யமாகவும் மூவ்களை செய்தார்.
ஆனந்த் வெள்ளைக்காய்களுடன் ஆடிய நிலையில், முதலில், ராஜாவுக்கு நேராக உள்ள சிப்பாயை 2 கட்டங்கள் நகர்த்தி தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினார். பிறகு, சற்று ரிஸ்கான மூவ்களை ஆனந்த் எடுத்தார். ஆனால் கார்ல்சன் சில வாய்ப்புகளை தவறவிட்டதால், ஆனந்த் வெற்றி வாகை சூடினார்.
குறிப்பாக, கார்ல்சனின் யானையக் குறிவைத்து ஆனந்த் தனது குதிரையை நகர்த்த இதனை கார்ல்சன் கோட்டை விட்டு, தனது ராஜாவை ஒரு கட்டம் முன்னேற்றி யானைக்கு காவலிட்டார். இருவெட்டுகள் விழுந்தன. ஆனந்த் குதிரையால் யானையைக் காலி செய்ய, கார்ல்சன் தன் ராஜாவினால் ஆனந்தின் குதிரையை அகற்றினார்.
அடுத்ததாக எஃப்3யில் இருந்த தனது யானையை கார்ல்சன் முனையில் உள்ள எஃப்3-யிற்கு நகர்த்தினார் ஆனந்த். பிறகு ராஜாவையும் தனது யானைக்கு நேராக கொண்டுவர, கார்ல்சனின் ராஜா முடங்கியது. ஆட்டம் முடிந்தது ஆனந்த் வெற்றி பெற்றார்.