குர்தீஷ் படையினரிடம் சிக்கி கதறி அழும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி... வைரலாகும் வீடியோ!
பாக்தாத்: ஈராக்கில் குர்தீஷ் படையினரிடம் பிடிபட்ட ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி ஒருவர் கதறி அழும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.
ஈராக்கில் சன்னி பிரிவு முஸ்லிம்களின் ஆதரவுடன் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் அரசுக்கு எதிராக தாக்குதல்கள் நடத்தி வருகின்றன. பல நகரங்களில் அரசு படைகளை விரட்டியடித்து ஆக்கிரமித்து உள்ளன. ஈராக் அரசு படைகளுக்கு ஆதரவாக குர்தீஷ் படைகளும் இணைந்து ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
ஈராக்கிற்கு ஆதரவாக குர்தீஷ் படையினருக்கு போர் ஆலோசனை வழங்க போர் தந்திர நிபுணர்கள் கொண்ட ஒரு பெரிய குழுவினை அமெரிக்கா அனுப்பி வைத்தது. மேலும், குர்தீஷ் படையினருக்கு ஏராளமான ஆயுதங்களையும் அமெரிக்கா வழங்கி வருகிறது.
உலகையே மிரட்டுகிறது...
இது தவிர உலகையே மிரட்டி வரும் பெரும் தீவிரவாத அமைப்பாக ஐஎஸ்ஐஎஸ் உருவாகி வருகிறது. அவ்வப்போது வீடியோக்கள் மூலமும், தாக்குதல்கள் மூலமும் தங்களது கோர முகத்தை அந்த அமைப்பு உலகிற்குக் காட்டி வருகிறது. தீவிரவாதிகளுக்கு இதயம் இருக்கிறதா என்பதைக் கேட்கும் அளவிற்கு அவர்களது நடவடிக்கைகள் உள்ளது.
வீடியோ...
இந்நிலையில் குர்தீஷ் படையிடம் சிக்கிய ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி ஒருவர் பயம் மற்றும் வலி காரணமாக அழுவது போன்ற வீடியோ ஒன்று இணையத்தில் உலா வருகிறது.
கதறி அழும் தீவிரவாதி...
அதில் கைகள் பின்புறம் கட்டப்பட்டு, கண்கள் கட்டப்பட்ட நிலையில் இளைஞர் ஒருவர் ராணுவத்தினரின் கவச வண்டியில் அமர வைக்கப்பட்டுள்ளார். சாதாரண உடையில் காணப்படும் அவர் அழுவது போன்ற காட்சிகள் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது.
வைரல்...
கடந்தாண்டு டிசம்பர் மாதம் வெளியான இந்த வீடியோ தற்போது மீண்டும் சமூகவலைதளங்கள் வாயிலாக வைரலாகியுள்ளது.
மற்றொரு நபர்...
அழும் கைதியின் உடலில் எந்தக் காயமும் கண்ணுக்குத் தெரியும் வகையில் இல்லை. அவருக்கு அருகிலேயே மற்றொரு நபர் அமர்ந்துள்ளார். ஆனால் அவர் அமைதியாக இருக்கிறார்.
நம்பிக்கை...
இந்த வீடியோவின் மூலம் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கும் உள்ளுக்குள் பயம், வலி எல்லாம் இருக்கும். எனவே அவர்களை வீழ்த்துவது எளிது என்ற நம்பிக்கை பிறந்துள்ளதாக நெட்டிசன்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.