"குண்டு ஒன்னு வச்சிருக்கேன்"... விளையாட்டு காட்டிய டாக்டருக்கு ரூ. 55 லட்சம் ஃபைன்!!
வெனிசுலா நாட்டில் மருத்துவராக உள்ளவர் மானுவேல் அல்வராடோ (60). இவர் கடந்த அக்டோபர் மாதம் 22ம் தேதி பகோடா நகருக்குச் செல்லும் விமானத்திற்காக அமெரிக்காவின் மியாமி இண்டர்நேஷனல் விமானநிலையத்தில் காத்திருந்தார்.
அப்போது, மானுவேலிடம் பாதுகாப்பு அதிகார்கள், விமான நிலைய அதிகாரிகள் வழக்கம் போல் விசாரணை மேற்கொண்டனர். அப்போது கொஞ்சம் விளையாட்டுத் தனமாக விசாரணையில் பதிலளித்துள்ளார் டாக்டர். அதாவது தன்னிடம் உள்ள லக்கேஜில் சி-4 எனப்படும் வெடிபொருள்கள் இருப்பதாக அதிகாரிகளிடம் அவர் தெரிவித்துள்ளார். பின்னர், தான் விளையாட்டுக்கு அவ்வாறு கூறியதாக டாக்டர் விளக்கமும் அளித்துள்ளார்.
ஆனால், அதனை நம்பாத அதிகாரிகள், உடனடியாக டாக்டரின் உடைமைகளை சோதனை இடத் தொடங்கியுள்ளனர். மேலும் அவர் இருந்த பகுதியிலும் அனைவரையும் வெளியேற்றினர் பாதுகாப்பு அதிகாரிகள். அந்தப் பகுதிக்கும் சீல் வைக்கப்பட்டது. இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சோதனைகளுக்குப் பின்னர் டாக்டர் சொன்னது பொய் என்பது உறுதியானது.
ஆனபோதும், வெடிகுண்டு புரளியை பரப்பி வீண் பரபரப்பை உண்டாக்கியதற்காக டாக்டருக்கு 90 ஆயிரம் டாலர் அபராதம் விதிக்கப்பட்டது. இது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 55 லட்சம் ஆகும்.
2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் நடந்த இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பின்னர் அமெரிக்காவில் வெடிண்டுகள் இருப்பதாக புரளி கிளப்பினால் அபராதத்தைத் தீட்டி விடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.