டாடா மோட்டார்ஸ் நிர்வாக இயக்குனர் மரணத்தில் திருப்பம்: மனைவி 3 பக்க கடிதம்
தாய்லாந்து தலைநகர் பாங்காங்க்கில் டாடா மோட்டார்ஸ் நிறுவன நிர்வாக இயக்குனர் கார்ல் ஸ்லிம் (51). கடந்த ஞாயிறன்று மர்ம முறையில் மரணமடைந்தார். நிர்வாக இயக்குனர்கள் சந்திப்புக்காக, வந்த இவரின் மரணத்தில் பல சந்தேகங்கள் எழுந்துள்ளன.
அவரது உடல் அவர் தங்கியிருந்த ஷங்க்ரி ஓட்டலில் உள்ள 4 வது மாடியில் கிடந்தது. இவர் 22வது மாடியிலிருந்து விழுந்து இறந்திருக்கலாம் என கருதப்படுகிறது. இது குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தற்போது ஒரு புதிய ஆதாரம் கிடைத்துள்ளது.
அது கார்ல் ஸ்லிமின் மனைவி சாலி எழுதிய மூன்று பக்க கையெழுத்திலான கடிதமாகும். சாலி அதில் தனது வீட்டு பிரச்சனைகளை பற்றி எழுதியுள்ளதாக, காவல்துறை அதிகாரி சோம்யாத் பூயாகேவ் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில் "எந்த ஒரு கைவிரல் ரேகைப் பதிவுகளும், இங்கு காணப்படவில்லை. ஆனால் பூட்டப் பட்டிருந்த ஜன்னலொன்றும் அருகிலிருந்து சிறிய ஜன்னலும் திறக்கப்பட்டிருந்தன. இந்த இரு ஜன்னல்களின் அருகே தான் சாவோ பிரயா நதி உள்ளது'', என்று தெரிவித்தார். மேலும் இது தற்கொலையாக கூட இருக்க கூடும் என்ற கோணத்திலும் போலீசார் விசாரிப்பதாக தெரிகிறது. கார்ல் ஸ்லிமின் மரணம் கொலையாக இருக்க வாய்ப்பு இல்லை என்று பாங்காங் போஸ்ட் பத்திரிக்கையில் செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது.
51 வயதான கார்ல் ஸ்லிம் 2012-ம் ஆண்டு டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டார். டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் சேரும் முன்பு ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தில் இருந்தார் கார்ல்.
அவரது மரணத்திற்குப் பின்னர், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய நிர்வாக இயக்குநரை விரைவில் நியமிக்க இருப்பதாக நிறுவனத்தின் செய்திதொடர்பாளர் தெரிவித் திருக்கிறார். இது குறித்து இன்னும் சில நாட்களில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் குழு கூட இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். இதற்கிடையே டாடா மோட்டார்ஸ் பங்கு 5.98 சதவீதம் சரிந்து, 348.25 ரூபாயில் இந்த பங்கின் வர்த்தகம் முடிவடைந்தது.