டிராம் வண்டி பயணம்... கீழே இறங்கிய குழந்தை கதறக், கதற பெற்றோருடன் வண்டியை ஓட்டிச் சென்ற ஓட்டுநர்!
லண்டன்: லண்டனில் புதிதாக ஆரம்பித்த டிராம் வண்டி சேவையில் முதன்முறையாக மகளை அழைத்துச் சென்ற பெற்றோரை மட்டும் சுமந்து கொண்டு கீழே இறங்கிய குழந்தை கதறக், கதற ஓட்டுநர் நிற்காமல் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தின் நாட்டிங்ஹாம்ஷைர் நகரில் சமீபத்தில் டிராம் சேவை தொடங்கியது. அதில் பயணிக்க அந்தோணி பிலிப்ஸ் மற்றும் மேகன் ஸ்மித் என்கிற இளம் பெற்றோர் தமது 3 வயது மகள் மெய்ஸியை ஆசையாக அழைத்துச் சென்றனர்.
திரும்பி வரும்போது அவர்களது வண்டி நின்றதும் குழந்தையை கூட்டத்துக்கு இடையே இறக்கிவிட்டார் அந்தோணி.
குழந்தையின் கையை விட்ட தந்தை:
அப்போது யாரோ கதவை மூடுவதற்கான பொத்தானை அமுக்கிவிட்டனர். குழந்தை மட்டும் கீழே இறங்கிய நிலையில், கதவிற்கு இடையே அப்பா, மகள் இருவரின் கையும் இருந்தது. நிலைமையை உணர்ந்த அந்தோணி உடனடியாக மெய்ஸியின் கையை விட்டுவிட்டார். வண்டி புறப்பட்டால் குழந்தையும் டிராமுடன் தரதரவென இழுக்கப்பட்டு விடுமோ என்கிற பயத்தில் அவர் இவ்வாறு செய்தார்.
விதிகளின்படி நிறுத்த முடியாது:
திடீரென தனித்து விடப்பட்டதும் பயந்துபோன குழந்தை மெய்ஸி, அப்பா அம்மாவுக்காக கத்தி அழ ஆரம்பித்தாள். அந்தோணி மற்றும் அவரது மனைவி மட்டுமின்றி அந்த டிராமில் இருந்த பலரும் வண்டியை நிறுத்தும்படி கேட்டனர். எனினும், அதன் ஓட்டுனர் நிறுவன விதிமுறைப்படி அப்படி நிறுத்த முடியாது என்று கூறிவிட்டார். எவ்வளவு கெஞ்சியும் அதை நிறுத்த அவர் ஒப்புக்கொள்ளவில்லை.
ஓடிவந்த பெற்றோர்:
வேறு வழியின்றி அடுத்த நிலையத்தில் வண்டி நின்றதும், வேகவேகமாக மூச்சிரைக்க ஓடிவந்த பெற்றோர், விட்டுச்சென்ற இடத்திலேயே குழந்தை பத்திரமாக வேறு ஒரு பெண்மணியுடன் நின்றிருப்பதைக் கண்டதும் நிம்மதியடைந்தனர்.
மன்னிப்பு கேட்ட ஓட்டுநர்:
ஓட்டுனரின் இந்தச் செயல் முக்கிய செய்தித்தாள்களில் வெளிவந்து பலரையும் கொந்தளிக்க வைத்தது. இதையடுத்து நடந்த சம்பவத்திற்காக மன்னிப்புக் கேட்டுக் கொண்ட டிராம் நிறுவனம், அந்தப் பெண்மணியை குழந்தையுடன் இருக்கும்படி தமது தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டதாக கூறினர். இனி, ஒருபோதும் டிராமில் பயணிக்கப் போவதில்லை என இச்சம்பவத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட பெற்றோர் தெரிவித்தனர்.