மருந்துக் கடைகளுக்கு லஞ்சம்.. நோவார்டிஸ் நிறுவனத்திற்கு ரூ. 2579 கோடி அபராதம்
வாஷிங்டன்: சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த பிரபல நோவார்டிஸ் மருந்து தயாரிப்பு நிறுவனத்திற்கு இந்திய மதிப்பில் ரூ. 2579 கோடி அளவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மருந்துக் கடைகளுக்கு சட்டவிரோதமாக லஞ்சம் கொடுத்த விவகாரத்தில் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சுவிடர்லாந்தைச் சேர்ந்த மருந்து நிறுவனம் நோவார்ட்டிஸ். இது கடந்த 2007 முதல் 2012ம் ஆண்டு வரை பல்வேறு ஸ்பெஷாலிட்டி மருந்துக் கடைகளி்ல் நோயாளிகளுக்கு தங்களது மருந்துகளை சட்டவிரோதமாக பரிந்துரைத்து வாங்கச் செய்யுமாறு கட்டாயப்படுத்துவதற்காக லஞ்ம் கொடுத்து வந்துள்ளது.
மேலும் அமெரிக்க அரசின் மெடிக்கெய்ட் மற்றும் மெடிக்கேர் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறும் நோயாளிகளையும் தனது மருந்தை வாங்குமாறு இந்த மருந்துக் கடைகள் மூலமாக நிர்ப்பந்தித்துள்ளது நோவார்டிஸ்.
இதுதொடர்பாக நோவார்டிஸ் நிறுவனத்தின் மீது அமெரிக்க அரசும், 40 மாகாண அரசும் நியூயார்க் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தது. விசாரணையின் முடிவில் நோவார்டிஸ் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது. எனவே, இந்த வழக்கில் நோவார்ட்டிஸ் நிறுவனத்திற்கு ரூ. 2578 கோடியே 24 லட்சத்து 90 ஆயிரத்து 500 அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
தனது தவறுகளை ஒத்துக் கொண்ட நோவார்ட்டிஸ் நிறுவனம் அபராதத்தையும் செலுத்த சம்மதித்துள்ளது.