ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட 9 ஆண்கள், சிறுவனை கொன்ற ஐஎஸ் தீவிரவாதிகள்
பெய்ரூட்: சிரியாவில் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதாகக் கூறி ஒன்பது ஆண்கள் மற்றும் ஒரு சிறுவனை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கொலை செய்துள்ளனர்.
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் ஓரினச்சேர்க்கையாளர்களை தேடிக் கண்டுபிடித்து அவர்களை துப்பாக்கியால் சுட்டு அல்லது உயரமான கட்டிடங்களின் மேல் இருந்து கீழே தள்ளி விட்டு கொலை செய்து வருகிறார்கள். இந்நிலையில் மத்திய சிரியாவில் உள்ள ஹோம்ஸ் மாகாணத்தில் இருக்கும் ரஸ்தான் நகரில் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதாகக் கூறி 7 ஆண்களை தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளனர்.
மேலும் வடக்கு சிரியாவில் உள்ள அலெப்போ மாகாணத்தில் இருக்கும் ரீத்தான் நகரில் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட குற்றத்திற்காக 2 ஆண்கள் மற்றும் ஒரு சிறுவனை தீவிரவாதிகள் கொலை செய்துள்ளனர்.
பொது இடத்தில் மக்கள் முன்பு அவர்களை கொலை செய்துள்ளனர். இந்த சம்பவத்தை வீடியோ எடுத்தவர்களின் கேமராவை பறித்து உடைத்துள்ளனர். சிரியா மற்றும் ஈராக்கில் தாங்கள் வைப்பது தான் சட்டம் என்று கூறி வருகின்றனர் தீவிரவாதிகள்.
ஓரினச்சேர்க்கை தவிர சூனியம் செய்வது, சிரிய அதிபர் பஷார் அல் ஆசாதுக்கு உண்மையாக இருப்பது ஆகிய குற்றங்களுக்கு தீவிரவாதிகள் மரண தண்டனை அளித்து வருகிறார்கள்.
அவர்கள் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து இதுவரை 1,800 பொதுமக்கள் உள்பட 3 ஆயிரம் பேரை கொலை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.