அமெரிக்கா: 17 வயது மகளை சுட்டுக் கொன்று தற்கொலைக்கு முயன்ற ஆந்திர பெண்
புளோரிடா: அமெரிக்காவில் வசிக்கும் 44 வயது ஆந்திர மாநில பெண் தனது 17 வயது மகளை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தன்னை தானே சுட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள ஆர்லாண்டோ நகரில் இருக்கும் பர்மிங்ஹாம் கோர்ட் பகுதியில் வசிப்பவர் ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த குட்டூர் ராவ். அவர் தனது மனைவி சுஜாதா(44) மற்றும் மகள் சேதனா(17) ஆகியோருடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். சேதனா ஆர்லாண்டோவில் உள்ள செமினோல் உயர்நிலைப் பள்ளியில் படித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை சுஜாதா தனது மகளை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தன்னைத் தானே சுட்டு தற்கொலைக்கு முயன்றார். ஆனால் குண்டடிபட்ட சுஜாதாவை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் நடந்தபோது ராவ் வீட்டில் இல்லை. குடும்ப பிரச்சனை தான் இந்த சம்பவத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே சுஜாதா மீது சேதனாவை கொலை செய்ததற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சுஜாதா இந்த கொடூரத்தை செய்யும் முன்பு அது குறித்து தனது சகோதரர் பிரசாத் சிட்டலூருவுக்கு இமெயில் அனுப்பியுள்ளார்.
சுஜாதா கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தான் .38 காலிபர் துப்பாக்கியை வாங்கியுள்ளார்.