பெண் வேடத்தில் வந்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு மையத்தில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி
வாஷிங்டன்: அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு மையத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒருவர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் போர்ட் மேடெவில் அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு மையத்தின் தலைமையகம் உள்ளது. பலத்த பாதுகாப்பு வளையம் கொண்ட அம்மையத்திற்குள் நுழைய இரு நபர்கள் முயன்றனர்.
இதனால் காவல்துறை அதிகாரிகள் இருவரையும் துப்பாக்கியால் சுட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியானர். 20 வயதை எட்டிய மற்றொரு நபர், குண்டு காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் காவல்துறை தரப்பில் காயமடைந்த 40 வயது அதிகாரிக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சந்தேகத்திற்குரிய நபர்கள் இருவரும், பெண்கள் அணியும் உடையணிந்து, திருடப்பட்ட போர்டு எஸ்கேப் எஸ்.யூ.வி. கார் மூலம் வந்துள்ளனர்.
எதற்காக அந்நபர்கள் பெண்கள் போல் உடையணிந்து வந்தார்கள் என தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இத்தாக்குதல் பற்றி அமெரிக்க அதிகாரிகள் கூறுகையில், "இது உள்ளூர் குற்ற வழக்கு. இதை தீவிரவாத சம்பவமாக பார்க்கக்கூடாது" என கூறினர்.
இருவரும் வந்த வாகனத்தில் இருந்து, ஏராளமான போதை பொருட்களும், ஒரு துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது.