வடகொரியாவின் அணுகுண்டு சோதனையால் விபரீதம்.. 11 அடி தூரம் நகர்ந்தது மலை!
வடகொரியாவில் அணு ஆயுத சோதனையால் மலை ஒன்று 11 அடி தூரம் நகர்ந்துள்ளது.
Recommended Video
பியாங்யாங்: வடகொரியா மேற்கொண்ட அணுஆயுத சோதனையின் விளைவால், அங்குள்ள மலை ஒன்று 11 அடி தூரம் நகர்ந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அணுஆயுத சோதனைக்குப் பேர் போனது வடகொரியா. அந்நாட்டின் 'மேன்டேப்’ மலைப் பகுதியில் புங்கேரி அணு ஆயுத சோதனைக் கூடம் உள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இங்கு ஒரு அணுஆயுத சோதனை நடத்தப்பட்டது.
அப்போது அப்பகுதியில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பின்னர் 2-வது முறையாக 4.1 ரிக்டரில் நில அதிர்வு உருவானது. அது ஜப்பானின் நாகசாகி நகரில் வீசப்பட்ட அணுகுண்டை விட 10 மடங்கு சக்தி வாய்ந்தது என ஆய்வாளர்கள் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டனர்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட இடத்தில் தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வந்தன. இந்த ஆய்வில் மேலும் அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று வெளியானது. அதாவது, அணு ஆயுத சோதனையின் காரணமாக அங்குள்ள 'மேன்டேப்’ மலை 11.5 அடி தூரம் தெற்கு நோக்கி நகர்ந்துள்ளதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். மேலும் அந்த மலையானது சுமார் 1.6 அடி பூமிக்குள் புதைந்துள்ளதும் தெரிய வந்தது.
தொடர் அணுஆயுத சோதனைகளால் 'மேன்டேப்’ மலைப் பகுதியின் சோதனைக் கூடம், செயல்படுத்த முடியாத அளவுக்கு சேதமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே தான் வடகொரியா அதிபர் கிம் ஜாங்-யங் உலக நாடுகளின் கோரிக்கையை ஏற்று அதைமூட இருப்பதாக நாடகமாடுகிறார் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
மேலும், விரைவில் அவர் வேறு இடத்தை அணு ஆயுத சோதனை நடத்த தேர்ந்தெடுக்கலாம் என்பதும் அவர்களது கருத்து.