ஐ.எஸ்.ஐ.எஸ். கைப்பற்றிய யுரேனியத்தால் பெரிய அச்சுறுத்தல் இல்லை: அணுசக்தி வல்லுநர்கள்
பாக்தாத்: ஈராக் சன்னி முஸ்லிம்களின் ஆயுதப் படையான ஐ.எஸ்.ஐ.எஸ். வசம் சிக்கியிருக்கும் யுரேனியத்தால் பெரிய அளவிலான அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று அணுசக்தித் துறை வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஈராக்கில் உள்நாட்டு போரை நடத்தி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் கடந்த மாதம் அந்நாட்டின் 2வது மிகப் பெரிய நகரமான மொசூலை கைப்பற்றியது. அப்போது அங்கு பல்கலைக் கழகம் ஒன்றில் இருந்த 40 கிலோ யுரேனியத்தையும் கைப்பற்றிச் சென்றனர் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தினர்.
இந்த யுரேனியத்தை வேறு பொருட்களுடன் கலந்து ஆயுதங்களை தயாரித்து பயங்கரவாத தாக்குதல்களை ஐ.எஸ்.ஐ.எஸ். மேற்கொள்ளலாம் என்றும் இந்த ஆபத்தில் இருந்து சர்வதேச சமூகம் தங்களது நாட்டை பாதுகாக்க வேண்டும் என்றும் ஐ.நா.விடம் ஈராக் முறையிட்டது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சர்வதேச அணுசக்தி முகாமையானது, ஐ.எஸ்.ஐ.எஸ். வசம் சிக்கியிருப்பது சிறிய அளவிலான யுரேனியம்தான்.. அதை வைத்து பெரிய அளவிலான அணு ஆயுதம் எதுவும் தயாரிக்க முடியாது என்று கூறியுள்ளது.
மேலும் சர்வதேச அணுசக்தி முகாமையின் முன்னாள் அதிகாரி ஓல்லி ஹெய்னோன் இது பற்றி கூறுகையில், பல்கலைக் கழக ஆய்வகத்தில் பயன்படுத்தப்பட்ட யுரேனியத்தைத்தான் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் கைப்பற்றியுள்ளது. அதாவது அது கதிர்வீச்சை வெளிப்படுத்தும் திறனற்ற வகையில்தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதனால் அந்த மூலப் பொருளில் இருந்து எந்த ஒரு கேடு விளைவிக்கும் ஆயுதத்தையும் தயாரித்துவிட முடியாது.. மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் அணுகுண்டுகளை எல்லாம் தயாரிக்கவே முடியாது என்கிறார்.
ஐ.நா. அதிகாரி
அதேபோல் 1990ஆம் ஆண்டு ஈராக்கில் அணு ஆயுதங்கள் இருக்கின்றனவா என்று சோதனை நடத்திய ஐ.நா.வின் முன்னாள் அதிகாரி போப் கெல்லி, நச்சுவாயுவை விட யுரேனியம் மிகவும் ஆபத்தானதுதான். யுரேனியம் கதிர்வீச்சை வெளிப்படுத்தக் கூடியது. அணுகுண்டுகளை இதை வைத்து தயாரிக்க முடியும் என்பது மோசமான கற்பனை. யுரேனியத்தை பெரிய அளவில் காற்றில் பரவவிட்டால் அது மறைந்துவிடும்.
இதன் மூலம் தயாரிக்கப்படும் குண்டுகள் வெடித்தால் நச்சு வாயுதான் வெளியே வரும். அதே நேரத்தில் பவுடர் தன்மையில் உள்ள சீசியம் 137 உடன் யுரேனியத்தை இணைத்து தண்ணீரில் கலந்தால்தான் மிக மோசமான விளைவு ஏற்படும்.
இவ்வளவு யுரேனியத்தை ஒரு பல்கலைக் கழகம் போருக்குப் பின்னரும் வைத்திருந்தது ஆச்சரியமளிக்கிறது. இந்த விவகாரத்தை ஐ.நா. பொதுச்செயலரிடம் கொண்டு செல்வதற்கு பதிலாக ஐ.நா.வின் அணு ஆயுத விவகார முகாமையிடம் கொண்டு சென்றிருக்க வேண்டும் என்றார்.