கூடங்குளத்தில் 3, 4வது அணு உலைகள் அமைப்பதில் சிக்கல்: காப்பீட்டு திட்டத்தால் ரஷ்யா தயக்கம்
மாஸ்கோ: இந்தியா கொண்டு வந்துள்ள அணு உலை பாதுகாப்பு இழப்பீடு சட்டத்தை ஏற்க ரஷ்யா மறுத்து வருகிறது. இதனால் கூடங்குளத்தில் மூன்றாவது மற்றும் நான்காவது அணு உலைகள் அமைக்கும் திட்டம் இழுபறிக்கு உள்ளாகியுள்ளது.
இந்தியா கடந்த 2010ல் நிறைவேற்றிய அணு உலை விபத்தின்போது பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீடு சட்டத்தை ரஷ்யா ஏற்க மறுக்கிறது. வழங்கப்பட வேண்டிய இழப்பீடு மிக மிக அதிகமாக உள்ளதாக ரஷ்யா கூறுகிறது.
கூடங்குளம் அணு உலையைக் கட்டிய ரஷ்யாவின் 'ரோசாடம் கார்ப்பரேஷன்' கட்டுமான நிறுவனத்தின் தலைமை இயக்குனர் லிமரன்கோ மாஸ்கோவில் நிருபர்களிடம் கூறுகையில், இவ்வளவு இழப்பீட்டை எந்த ஒரு தனி காப்பீட்டு நிறுவனமும் ஏற்க முடியாது. இதை பல காப்பீட்டு நிறுவனங்கள் இணைந்து தான் வழங்க முடியும். இந்தப் பிரச்சனைக்கு தீர்வு வந்தால் தான் கூடங்குளத்தில் 3 மற்றும் 4வது உலைகளைக் கட்ட முடியும் என்றார்.
முன்னதாக இந்தியாவின் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் தன்னால் மட்டும் இவ்வளவு பெரிய காப்பீட்டை வழங்க முடியாது என்று இந்திய அணு சக்தித் துறையிடம் தெரிவித்துவிட்டது. இதையடுத்து பல்வேறு இந்திய, சர்வதேச இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இணைந்த ஒரு அணு உலை காப்பீட்டுத் திட்டத்தை உருவாக்குமாறு இந்திய அணு சக்தித்துறை மத்திய நிதியமைச்சகத்திடம் கோரிக்கை வைத்தது. ஆனால், இதற்காக அணு உலைகளை பார்வையிடும் அனுமதியை இந்த நிறுவனங்களுக்குத் தர வேண்டிய அவசியம் உருவானது.
ஆனால், சர்வதேச இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இந்திய அணு உலையைப் பார்வையிட அனுமதி தர இந்தியா தயங்கி வருகிறது. இதனால் இந்த காப்பீட்டுத் திட்டமே தொங்கலில் உள்ளது.
ஆனால், உரிய காப்பீட்டுத் திட்டத்தை இந்தியா உருவாக்காதவரை கூடங்குளத்தில் 3 மற்றும் 4வது அணு உலையை அமைக்க முடியாது என்பதில் ரஷ்யா திட்டவட்டமாக உள்ளது.
கூடங்குளத்தில் மின் உற்பத்தி நிறுத்தம்:
இந் நிலையில் கூடங்குளத்தின் முதலாவது அணு உலையில், சமீபத்தில் முழு அளவான, 1,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது. இந்த அணு உலையில் கடந்த ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி மின் உற்பத்தி தொடங்கியது. அணுசக்தி ஒழுங்கு முறை ஆணைய வழிகாட்டுதலின்படி இந்த உற்பத்தி படிப்படியாக உயர்த்தப்பட்டு, கடந்த 7-ம் தேதி நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 1000 மெகாவாட் மின் உற்பத்தியை எட்டியது.
அதன் பின்னர் தொடர்ந்து 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில், நேற்று உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. சோதனை ஓட்டத்துக்காக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டிருப்பதாக அணு உலை வளாக இயக்குனர் சுந்தர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே கூடங்குளம் இரண்டாவது அணு உலை இன்னும் 8 மாதத்தில் செயல்பாட்டிற்கு வரும் என்று பாபா அணு ஆராய்ச்சி மைய இயக்குனர் சேகர் பாசு தெரிவித்துள்ளார்.