அமெரிக்க ரெஸ்டாரண்டில் நிர்வாண நபர் துப்பாக்கி சூடு.. 4 பேர் பலி! துப்பாக்கியை பறித்து காத்த கஸ்டமர்
வாஷிங்டன்: அமெரிக்காவில் உள்ள ரெஸ்டாரண்ட் ஒன்றில், நிர்வாண நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூடு தாக்குதலில், 4 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்திலுள்ளது அன்டியோக் நகரம். இதன் புற நகர் பகுதியில் வாஃபிள் ஹவுஸ் என்ற ரெஸ்டாரண்ட் உள்ளது.
அங்கு அந்த நாட்டு நேரப்படி 03:25 மணிக்கு வந்த நிர்வாண இளைஞர் ஒருவர் தனது கையில் வைத்திருந்த AR-15 வகை தானியங்கி துப்பாக்கியால் சரமாரியாக சுடத் தொடங்கினார்.
நான்கு பேர் பலி
இந்த தாக்குதலில் ரெஸ்டாரண்டில் இருந்த 3 பேர் அதே இடத்திலும், ஒருவர் மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். அப்போது அங்கேயிருந்த வாடிக்கையாளர்களில் ஒருவரான ஜேம்ஸ் ஷா ஜூனியர் என்பவர் தைரியத்தோடு, ஓடிச் சென்று, கொலையாளி கையில் இருந்த துப்பாக்கியை பறித்தார். இதையடுத்து கொலையாளி அங்கேயிருந்து தப்பியோடிவிட்டான்.
துப்பாக்கி சூடு குற்றவாளி
தகவல் அறிந்து நாஷ்வில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தாக்குதலில் ஈடுபட்ட நபர் யார் என்பதை போலீசார் துப்பறிந்துள்ளனர். அந்த நபரின் பெயர் ட்ராவிஸ் ரெய்ன்கிங் என்றும் 29 வயது வாலிபரான இவர், கடந்த ஆண்டு தடை செய்யப்பட்ட பகுதியில் நுழைந்ததற்காக வெள்ளை மாளிகை அருகே கைதானவர் என்பதும் தெரியவந்துள்ளது.
|
நான் ஹீரோ இல்லை
இதனிடையே, நிருபர்களிடம் பேசிய ஜேம்ஸ் ஷா ஜூனியர், தன்னை ஹீரோ போல சித்தரிப்பதை விரும்பவில்லை என்றும், தனது உயிரை காப்பாற்றிக்கொள்ளவே துப்பாக்கியை பறித்தேன் என்பதால் இது சுயநல செயல்தான் என்றும் கூறியுள்ளார். துப்பாக்கியை பறிக்கும் முயற்சியின்போது இவருக்கு கையில் காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க துப்பாக்கி சூடு சம்பவங்கள்
கடந்த ஆண்டு அக்டோபரில் லாஸ் வேகாசில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தில் 58 பேர் பலியாகினர். பிப்ரவரியில் புளோரிடா மாகாணத்தில் புள்ளியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 17 மாணவர்களும், ஒரு ஊழியரும் பலியாகினர். இந்த சம்பவங்களில் பயன்படுத்தப்பட்ட அதே வகை துப்பாக்கிதான், இன்றைய தாக்குதலின்போதும் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.