ரத்த வெள்ளத்தில் மிதந்த குழந்தை... 'டர்பனை'க் கழற்றி ரத்தக் கசிவை நிறுத்திய சீக்கியர்!
மெல்போர்ன்: நியூசிலாந்தில் சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்த ஒரு குழந்தையின் தலையிலிருந்து வழிந்தோடிய ரத்தத்தை தடுத்து நிறுத்த தனது டர்பன் எனப்படும் தலைப்பாகையை கழற்றிய அதை குழந்தையின் தலைக்குக் கீழே வைத்து உதவிய சீக்கியரின் செயலால் அனைவரும் நெகிழ்ந்து போனார்கள்.
அந்த இளைஞரின் பெயர் ஹர்மான் சிங். 22 வயதாகும் அவர் ஆக்லாந்தில் வசித்து வருகிறார். இவர் சம்பவத்தின்று சாலையில் தனது நண்பர் ககன் தில்லான் என்பவருடன் சென்று கொண்டிருந்தபோது திடீரென கார் மோதி நிற்கும் சத்தம் கேட்டது. திரும்பிப் பார்தாத்தால், சாலையோரமாக சென்று கொண்டிருந்த ஒரு சிறுவன் மற்றும் அவனது சகோதரி ஆகியோர் மீது கார் மோதியிருந்தது.
இதில் அந்த சிறுமி காயமின்றி தப்பினாள். ஆனால் சிறுவன் காயமடைந்தான். அவனது தலையிலிருந்து ரத்தம் கொட்டியது. கூட்டம் கூடி விட்டது. அங்கு விரைந்து சென்ற ஹர்மான், சிறுவனின் தலையிலிருந்து வழிந்த ரத்தத்தைப் பார்த்தார். உடனே சற்றும் தாமதிக்காமல் தனது தலைப்பாகையை வேகமாக கழற்றி அதைப் பிரித்து அதை சிறுவனின் தலைக்குக் கீழே இறுக்கமாக கட்டியபடி வைத்தார். இதனால் ரத்தக் கசிவு நின்றது.
உடனடியாக அக்கம் பக்கத்தினர் கூடி மருத்துவமனைக்கு சிறுவனை அனுப்பி வைத்தனர். முதலில் அபாய கட்டத்தில் சிறுவன் இருக்கலாம் என கருதப்பட்டது. ஆனால் சிறுவனின் நிலை தேறுவதாகவும், அவனுக்கு ஆபத்தில்லை என்றும் டாக்டர்கள் அறிவித்தனர்.
சமயோஜிதமாக செயல்பட்ட ஹர்மானின் செயலை அங்கிருந்த அனைவரும் பாராட்டிப் புகழ்ந்தனர். மேலும் அவரது நண்பர் ககன் தில்லானும் இந்தக் காட்சியை புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் போட அது வைரல் ஆகி விட்டது.
இதுகுறித்து ஹர்மான் கூறுகையில், டர்பனைக் கழற்றுவது என்பது மிகவும் அரிதிலும் அரிதான செயல். ஆனால் அந்த சமயத்தில் எனக்கு அதைத் தவிர வேறு வழி தோன்றவில்லை. அந்தக் குழந்தையின் தலையிலிருந்து வந்த ரத்தத்தை நிறுத்த வேண்டும் என்பது மட்டுமே எனது எண்ணமாக இருந்தது.
இதுபோன்ற அவசர காலங்களில் மத சம்பிரதாயங்கள் குறுக்கே நிற்பதில்லை என்றும் கூறினார் ஹர்மான்.