பணம் தர முடியாது... ஹோட்டல் ஓனரின் "தில்".. கப்சிப்பென திரும்பிப் போன திருடர்ர்ர்ர்!
கிறிஸ்ட்சர்ச், நியூசிலாந்து: துப்பாக்கியைக் காட்டி மிரட்டியும் கூட அஞ்சாமல் கடைக்காரர் தைரியமாக நின்றதைப் பார்த்து குழம்பிப் போன திருடன், தனது திருட்டு முயற்சியைக் கைவிட்டு விட்டு திரும்பிப் போன காமெடி சம்பவம் நியூசிலாந்தில் நடந்துள்ளது.
அந்த தைரியமான கடைக்காரரின் பெயர் சையத் அகமது. நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று அவர் கல்லாப் பெட்டி அருகே நின்றிருந்தார். அப்போது ஒரு நபர் அங்கு வந்தார். கையில் துப்பாக்கி வைத்திருந்த அவர் டிக்கெட் கவுண்டரிடம் வந்து சையத் அகமதுவிடம் துப்பாக்கியை நீட்டினார்.
பணத்தையெல்லாம் எடு என்றார். ஆனால் சற்றும் அசராத சையத் அகமது, பணம் தர முடியாது. என்ன செய்வியோ செஞ்சுக்க என்றார் முகத்தை சலனமே இல்லாமல் வைத்துக் கொண்டு. இதைக் கேட்டு திருடனுக்கு அதிர்ச்சியாகி விட்டது. இப்படிப்பட்ட பதிலையும், தைரியத்தையும் அந்த நபர் எதிர்பார்க்கவில்லை.
பேசாமல் அமைதியாக சில நொடிகள் நின்றிருந்த அந்த திருட்டு நபர், பின்னர் அப்படியே கிளம்பிப் போய் விட்டார். சையதும் தனது வேலையில் மூழ்கி விட்டார்.
இதுகுறித்து சையத் கூறுகையில், அவர் என்னைப் பயமுறுத்தப் பார்த்தார். ஆனால் அதற்குப் பணிவதில்லை என்று நான் முடிவெடுத்தேன். அந்த சமயத்தில் ஒரு வாடிக்கையாளர் உணவுக்காக காத்திருந்தார். அவருக்கு உணவைக் கொடுத்து பத்திரமாக வெளியே அனுப்பி விட்டேன். என்னால் அவருக்குப் பாதிப்பு வந்து விடக் கூடாது என்று நான் நினைத்தேன்.
எனது செய்கையால் அந்த திருடனுக்குப் பெரும் குழப்பமாகி விட்டது. நான் பயப்படாமல் நின்றதால் அந்த நபர் பேசாமல் திரும்பிப் போய் விட்டார் என்றார் சையத்.
அந்த "அப்பாவி"த் திருடனை தற்போது போலீஸார் வலை வீசித் திருடிக் கொண்டிருக்கின்றனராம்.