தேவ்யானி விவகாரத்தால் அமெரிக்க-இந்திய உறவில் விரிசல் ஏற்படக்கூடாது: அமெரிக்கா
வாஷிங்டன்: அமெரிக்காவிற்கான முன்னாள் இந்திய பெண் துணை தூதர் தேவ்யானி கோப்ரகடே விவகாரத்தால் இந்திய-அமெரிக்க நட்புறவில் விரிசல் ஏற்பட்டு விட கூடாது என அமெரிக்க அதிபர் ஒபாமாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சூசன் ரைஸ் வலியுறுத்தியுள்ளார்.
சமீபத்தில், அமெரிக்காவில் விசா மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு பொது இடத்தில் வைத்துக் கைது செய்யப் பட்டார் இந்தியாவிற்கான துணைத்தூதரான தேவ்யானி. இந்தியத் துணைத்தூதரை இவ்வாறு கைது செய்தது இந்தியாவையே அவமானப் படுத்தும் செயல் எனக் கண்டனம் தெரிவித்தது இந்தியா.
இதனால், இந்திய-அமெரிக்க உறவில் விரிசல் உண்டாகும் நிலை ஏற்பட்டது. தொடர் சர்ச்சைகளுக்கு மத்தியில் அமெரிக்காவில் இருந்து தாயகம் திரும்பினார் தேவ்யானி. அவர் மீது தொடரப்பட்ட வழக்கு தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்நிலையில், அமெரிக்க-இந்திய பேச்சுவார்த்தை தொடர்பாக ஏஸ்பென் அமைப்பில் நேற்று உரையாற்றினார் அந்நாட்டு அதிபர் ஒபாமாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சூசன் ரைஸ்.
அப்போது அவர் கூறியதாவது:-
ஆக்கப்பூர்வமான முடிவு...
சமீபத்திய நிகழ்வுகள், ஒத்துழைப்பு முயற்சிகளுக்கு பதிலாக வேறுபாடுகளுக்கு வழிவகுக்கும் வகையில் கவனத்தை கொண்டு சென்றுள்ளது. ஆனால் இந்த கடினமான விவகாரங்கள் நம்முடைய நட்புறவுடன் ஒப்பிடும்பொழுது மிக சிறியவை. எனவே, நாம் ஒன்றிணைந்து செயல்பட முடியும். நமக்கு இடையேயான பிரச்சனைகளையும் நாம் கவனத்திற்கொண்டு அவற்றை ஆக்கப்பூர்வமான முறையில் களைய வேண்டும்.
ஆயுத சந்தை...
இரு நாடுகளும், தீவிரவாத எதிர்ப்பு, உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் எல்லை பாதுகாப்பு ஆகிய விவகாரங்களில் ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டும். மேலும, இந்தியாவானது அமெரிக்க ஆயுதங்களை வாங்குவதில் மிக பெரும் சந்தையாக விளங்குகிறது.
வளமிக்க எதிர்காலம்...
இது போன்ற (தேவ்யானி விவகாரம்) பிரச்சனைகளால் வளமிக்க எதிர்காலம் தடம் மாறி செல்ல நாம் அனுமதிக்க முடியாது. மிக பெரிய அளவிலான வளமை, பெரும் பாதுகாப்பு மற்றும் நம்மிடையேயான உறவுகள் ஆகியவற்றிற்கான வருங்காலத்தை பாதிக்கும் விசயங்களை நாம் அனுமதிக்க முடியாது.
நாடாளுமன்றத் தேர்தல்...
இந்தியாவில் நடைபெற உள்ள தேர்தலின் முடிவு எதுவாக இருந்தாலும், இரு நாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பு மற்றும் உயர்மட்ட அளவிலான நட்புறவானது வளர்ச்சி அடையும் வகையில் தொடரும் என்று அமெரிக்கா நம்பிக்கை கொண்டுள்ளது' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.