முதல் முறையாக ஒபாமாவின் செல்வாக்கில் சிறு சரிவு.. முந்தினார் புஷ்!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் செல்வாக்கில் லேசான சரிவு ஏற்பட்டுள்ளதாக சிஎன்என் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் செல்வாக்கு சற்று கூடியுள்ளது.
அமெரிக்காவில் அதிபர் ஒபாமாவின் செல்வாக்கு குறித்து சமீபத்தில் சி.என்.என். மற்றும் ஓ.ஆர்.சி. சர்வதேச நிறுவனம் கருத்து வாக்கெடுப்பு நடத்தின.
முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ் மற்றும் தற்போதைய அதிபர் ஒபாமா இடையே செல்வாக்கு குறித்து கருத்து கேட்கப்பட்டது.
அதில், அதிபர் ஒபாமாவின் செல்வாக்கில் லேசான சரிவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு ஆதரவாக 47 சதவீதம் பேர் கருத்து தெரிவித்தனர்.
ஆனால் முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ்சுக்கு ஆதரவாக 51 சதவீதம் பேர் கருத்து கூறியுள்ளனர். இது கடந்த 2009-ம் ஆண்டு நடந்த வாக்கெடுப்பில் கிடைத்ததைவிட விட கூடுதலாகும்.
அப்போது, இவருக்கு 46 சதவீதம் மட்டுமே ஆதரவு இருந்தது. இப்போது 5 சதவீத ஆதரவு கூடியுள்ளது.
அமெரிக்க மக்களிடையே ஒபாமாவின் செல்வாக்கு குறைந்து இருப்பதாக சி.என்.என். வாக்கெடுப்பு இயக்குனர் கீட்டிங்க ஹோலண்டு தெரிவித்தார்.
அடுத்த அதிபர் வேட்பாளர் என்று கூறப்படும் ஹிலரி க்ளிண்டன் செல்வாக்கும் சரிந்துள்ளது. 2013-ல் 67 சதவீதமாக இருந்த அவரது செல்வாக்கு, இப்போது 55 சதவீதமாகக் குறைந்துள்ளது.
ஆனால் ஹிலரியின் கணவர், முன்னாள் அதிபர் பில் க்ளிண்டனுக்கு 68 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது.