ஐ.நா. கூட்டத்தில் உக்ரேன், கிரீமியா விவகாரத்தில் ரஷ்யா மீது ஒபாமா கடும் தாக்கு!!
நியூயார்க்: ஐக்கிய நாடுகள் சபையின் ஆண்டு கூட்டத்தில் உக்ரேன், கிரீமியா விவகாரத்தில் ரஷ்யாவின் நடவடிக்கைகளை அமெரிக்கா அதிபர் ஒபாமா மிகக் கடுமையாக விமர்சித்தார். அதே நேரத்தில் ரஷ்யாவுடன் பனிப்போருக்கு திரும்பவும் அமெரிக்கா விரும்பவில்லை என்றார். மேலும் சிரியா பிரச்சனைக்கு தீர்வு காண ஈரான், ரஷ்யாவுடன் இணைந்து செயல்படவும் அமெரிக்கா தயார் என்றும் ஒபாமா கூறினார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 70வது ஆண்டு கூட்டத்தில் அமெரிக்கா அதிபர் ஒபாமா ஆற்றிய உரை:
உலகின் மிக வலிமையான ராணுவத்தைக் கொண்டது அமெரிக்கா என்பதை அனைவரும் அறிவோம். எங்கள் நாட்டையும் எங்களது நட்புநாட்டையும் பாதுகாக்க எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவும் நாங்கள் தயங்கமாட்டோம்.
நாம் யுத்தங்கள் போன்ற பழைய பாதைக்கு திரும்ப வேண்டாம். நாடுகள் அனைத்தும் ஒருங்கிணைந்த உலகமாக வாழ்கிறோம். எந்த ஒருநாடும் பயங்கரவாத அச்சுறுத்தல், பொருளாதார சீரழிவு உள்ளிட்டவற்றுக்கு ஆளாகாகக் கூடாது; அப்படி ஒரு நாடு பாதிப்பை எதிர்கொண்டால் அதன் விளைவுகள் அனைத்து நாடுகளுக்கும் ஏற்படும்.
ஈராக் பாடம்
அமெரிக்கா வலிமையான ராணுவத்தையும் பொருளாதாரத்தையும் பெற்றிருந்தாலும் உலக நாடுகளின் பிரச்சனைகளை நாங்கள் மட்டுமே தீர்த்துவிட முடியாது. ஈராக்கில் ஆயிரக்கணக்கான வீரர்களின் உயிரிழப்பு, டிரில்லியன் டாலர் செலவு என பெரும்விலை கொடுத்துதான் அமெரிக்கா மிகக் கடினமான பாடங்களை கற்றுக் கொண்டுள்ளது.
புரட்சிக்கு விதை
கடந்த 20 ஆண்டுகால உலக வரலாற்றில் சர்வாதிகாரம் என்பது நிலையற்றது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இன்று சர்வ வல்லமை பொருந்திய தலைவராக நீங்கள் தோன்றினால் நாளைய புரட்சிக்கு வித்திடுகிறீர்கள் என்பதுதான் யதார்த்தம். உங்கள் எதிரிகளை வேண்டுமானால் நீங்கள் சிறைபடுத்தலாம்.. ஆனால் அவர்களது சித்தாந்தங்களை சிறைப்படுத்திவிட முடியாது. தகவல்கள் சென்று சேருவதை நீங்கள் தடுத்துவிடலாம் ஆனால் உண்மையை நீங்கள் மறைத்துவிட முடியாது. அமெரிக்கா ஆதரவு என்.ஜி.ஓக்கள் மட்டுமே ஊழல்களை அம்பலப்படுத்த துணை நிற்கவில்லை; தற்போது தொழில்நுட்ப யுகம்; சமூகவலைதள யுகம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
ஈரான்
அணுசக்தி விவகாரத்தில் ஈரான் மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் பொருளாதாரத் தடை விதித்தது. இந்த தடை ஈரானை தண்டிப்பதற்கானது அல்ல. ஈரான் தன்னை மாற்றிக்கொள்ளத்தான் இந்த தடை.
உக்ரேன், கிரீமியா விவகாரம்
கிரீமியாவையும் கிழக்கு உக்ரேனையும் ரஷ்யா தன்னோடு இணைத்துக் கொள்ள முயற்சிக்கிறது. உக்ரேனில் அமெரிக்காவுக்கு சில பொருளாதார ஆதாயங்கள் உள்ளன. ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்குமான வரலாற்று உறவை நாம் அங்கீகரிக்கிறோம். அதே நேரத்தில் உக்ரேன் ஒரு தேசம் என்கிற அடிப்படையில் அதன் இறையாண்மை பறிபோவதற்கு துணைநிற்க முடியாது.
மீண்டும் பனிப்போர் அல்ல
உக்ரேனுக்கு நிகழ்ந்தது இன்று உலகின் எந்த ஒருநாட்டுக்கும் நடைபெறலாம்.. அதனால்தான் ரஷ்யா மீது அமெரிக்காவும் அதன் நேசநாடுகளும் பொருளாதார தடை விதித்தன. அதற்காக மீண்டும் பனிப்போர் காலத்துக்கு நாம் திரும்புகிறோம் என்பது அர்த்தம் அல்ல.
உக்ரேன் நாட்டு மக்கள் ரஷ்யாவுடன் இணைந்திருப்பதைவிட ஐரோப்பாவுடன் இணைவதைத்தான் விரும்புகிறார்கள். ரஷ்யாவுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் தடை விதிப்பு நடவடிக்கை.
தனிமைப்படுத்தவில்லை
ரஷ்யா, உக்ரேனுடன் நேர்மையான அரசியல் ரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் நிச்சயம் சர்வதேச சமூகம் அந்த நாட்டின் நலன்களைப் பாதுகாக்க முன்வந்திருக்கும். அதற்காக ரஷ்யாவை நாங்கள் தனிமைப்படுத்துகிறோம் என்பது அல்ல. சர்வதேச சமூகத்தில் வலிமையான ரஷ்யாவின் பங்களிப்பு தேவை என்பதை நாங்கள் உணருகிறோம்.
தென்சீன கடல் விவகாரம்
இதேபோல் தென்சீனக் கடல்பிராந்தியத்தில் அமெரிக்கா எந்த ஒரு உரிமையையும் கோரவில்லை. அதே நேரத்தில் அந்த பிராந்தியத்தில் சுதந்திரமான கடல்வழிப் போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டியதும் அவசியம். தென்சீன கடல்பிராந்தியத்தில் இதர நாடுகளுடனான பிரச்சனைகளை சீனா அமைதிவழியில் தீர்த்துக் கொள்ளவேண்டும்.
கியூபா
கியூபா மீதான அமெரிக்காவின் அரைநூற்றாண்டு கொள்கை தோல்வி அடைந்துவிட்டதை உணர்கிறோம். ஆகையால் நாங்கள் எங்களை மாற்றிக் கொண்டிருக்கிறோம்.
எங்களுக்கும் கியூபா அரசுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நீடிக்கின்றன. நாங்கள் மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். ஆனால் இதை ராஜிய உறவுகள் வழியே செய்ய வேண்டும் என விரும்புகிறோம்.
கியூபாவில் ஓரிரவில் மாற்றங்கள் வந்துவிடாது. நிச்சயம் கியூபா ஒருநாள் இதரநாடுகள் இணைந்து செயல்படும் நிலைமைக்கு மாறும் என்ற நம்பிக்கை உண்டு.
ஐ.எஸ்.ஐ.எஸ்.
ஐ.எஸ்.ஐ.எஸ். போன்ற பயங்கரவாத இயக்கங்களை நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அதன் மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளை ஏற்க முடியாது. ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துக்கு எதிரான போர் என்பது உலகளாவிய ஐ.நா.வின் போராக அமைய வேண்டும்.
சிரியா
சிரியா அதிபர் ஆசாத் சர்வாதிகாரியாக செயல்படக் கூடாது. சிரியா பிரச்சனையை தீர்க்க ரஷ்யா, ஈரானுடன் இணைந்து செயல்பட நாங்கள் தயார். இதற்கான நடவடிக்கைகளை ஐ.நா.சபை முன்னெடுக்க வேண்டும்.
இவ்வாறு ஒபாமா உரையாற்றினார்.