அரை நூற்றாண்டுகால பகை விலகியது! ஒபாமா- ரவூல் காஸ்ட்ரோ நேரில் சந்தித்து கைகுலுக்கினர்!!
பானாமாசிட்டி: அமெரிக்கா அதிபர் ஒபாமா மற்றும் கியூபா அதிபர் ரவூல் காஸ்ட்ரோ ஆகியோரிடையே நேற்று நடைபெற்ற நேரடி சந்திப்பின் மூலம், இரு நாடுகளுக்கிடையே இருந்த 50 ஆண்டு கால பகை மறந்து புதிய உறவு மலர்ந்துள்ளது. உலக அரசியல் வரலாற்றில் இது புதிய அத்தியாயமாகும்.
கியூபாவில் புரட்சியின் மூலம் பிடல் காஸ்ட்ரோ ஆட்சியை பிடிப்பதற்கு முன்பும், பின்பும் அமெரிக்காவும், கியூபாவும் எதிரி நாடுகளாகவே இருந்தன. ஐ.நா மாநாட்டில் அமெரிக்காவுக்கு எதிராக மிக நீண்ட சொற்பொழிவையும் பிடல் காஸ்ட்ரோ நிகழ்த்தியிருந்தார்.
இந்நிலையில் உடல்நல கோளாறு காரணமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பிடல் அதிபர் பதவியிலிருந்து விலகினார். அவரது இடத்தை பிடலின் சகோதரர் ரவூல் காஸ்ட்ரோ நிரப்பினார்.
புதிய அதிபராக ரவூல் பதவியேற்றதற்கு பின் அமெரிக்காவுடனான உறவில் மாற்றம் ஏற்பட்டது. அமெரிக்காவுடன் நட்பு பாராட்ட முன் வந்தார் ரவூல். இரு நாடுகளுக்கிடையே நடைபெற்ற பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பின், அதிபர்கள் ஒபாவும் - ரவூல் காஸ்ட்ரோவும் நேற்று சந்தித்து பேசியுள்ளனர்.
பானாமாசிட்டியில் நடைபெற்ற உச்சிமாநாட்டில் நேற்று நடைபெற்ற இரவு உணவு விருந்தில் வரலாற்று பூர்வமான இச்சந்திப்பு நிகழ்ந்தது. அப்போது ஒபாமாவும், ரவூல் காஸ்ட்ரோவும் ஒருவருக்கொருவர் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்துக்கொண்டனர்.
முன்னதாக பனாமாவுக்கு புறப்படுவதற்கு முன்னரும் ரவூல் காஸ்ட்ரோவுடன், ஒபாமா தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, பயங்கரவாத நாடுகள் பட்டியலில் இருந்து கியூபா நீக்கப்படும் என்று ஒபாமா கூறியிருந்தார்.
மேலும் இன்று இரு தலைவர்களும் சில நிமிடங்கள் தனியாக சந்தித்து பேச உள்ளதாகவும் கூறப்படுகிறது.