வெள்ளை மாளிகையில் தீபமேற்றி தீபாவளி கொண்டாடிய ஒபாமா! வருங்கால அமெரிக்க அதிபர்களும் கொண்டாட கோரிக்கை
வாஷிங்டன்: வெள்ளை மாளிகையில் திருவிளக்கு ஏற்றி வைத்து தீபாவளியை கொண்டாடினார் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா.
2009ம் ஆண்டு முதல் இக்கொண்டாட்டத்தை நடத்தி வருகிறார் ஒபாமா. தீபாவளி கொண்டாட்டத்தை வெள்ளை மாளிகையில் அறிமுகம் செய்து வைத்த முதலாவது அமெரிக்க அதிபர் இவர்தான்.
வெள்ளை மாளிகையிலுள்ள ஓவல் அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற விளக்கேற்றும் நிகழ்ச்சியில் அமெரிக்க வாழ் இந்திய அதிகாரிகள் சிலரும் பங்கேற்றனர். இந்த நிகழ்வை வெள்ளை மாளிகை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டதும், அது வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
"2009 முதல் வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாட்டத்தை நடத்தி வருகிறேன். இக்கொண்டாட்டத்தை அறிமுகம் செய்த முதல் அமெரிக்க அதிபர் என்பதற்காக பெருமை அடைகிறேன். தீபாவளி தினத்தன்று இந்தியாவில் எங்களுக்கு அந்த நாட்டு மக்கள் திறந்த இதயத்தோடு வழங்கிய வரவேற்பையும், மும்பையில் எங்களோடு சேர்ந்து அவர்கள் நடனமாடியதையும், நானும் மிட்சேலும் (ஒபாமாவின் மனைவி) மறக்க மாட்டோம்.
ஓவல் அலுவலகத்தில் முதல்முறையாக இவ்வாண்டு தீபமேற்றியுள்ளேன். இருளை ஒளியால் அகற்ற முடியும் என்பதை உணர்த்தவே தீப ஒளியேற்றப்படுகிறது. இனிவரும் அமெரிக்க அதிபர்களும், இதே பாரம்பரியத்தை பின்பற்றுவார்கள் என நம்புகிறேன்.
உங்களுக்கும், உங்கள் அன்புக்கு உரியவர்களுக்கும், என் சார்பிலும் எனது குடும்பத்தார் சார்பிலும், தீபாவளி நல் வாழ்த்துக்களை சொல்லிக்கொள்கிறேன். அன்பும், அமைதியும் தழைக்கட்டும். இந்துக்கள், சமணர்கள், சீக்கியர்கள் மற்றும் பவுத்தமதத்தினர் தங்கள் வீடுகளில் விளக்கேற்றுகிறார்கள். தீயதை நல்லது அழிக்கும் என நம்புகிறார்கள். அறியாமையை, அறிவுகொண்டு அகற்றுவதே தீபமேற்றுவதன் பாரம்பரியம்" இவ்வாறு ஒபாமா கூறினார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. ஹிலாரி கிளிண்டன் மற்றும், டொனால்ட் ட்ரம்ப் ஆகிய இருவரும் அப்பதவிக்கு போட்டியிடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.