அமெரிக்கா இராணுவம் 2016-க்குப் பின்னரும் ஆப்கானில் இருக்குமாம்... ஒபாமா 'பல்டி'
வாஷிங்டன்: ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா ராணுவம் படிப்படியாக வெளியேறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது 2016ஆம் ஆண்டுக்குப் பின்னரும் அமெரிக்கா படைகள் அங்கு நிலைகொண்டிருக்கும் என அதிபர் ஒபாமா அதிரடியாக அறிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்களை வேட்டையாடுவதற்காக அமெரிக்கா படைகள் களமிறக்கப்பட்டன. தலிபான்களை ஒடுக்கிய நிலையில் பெரும் எண்ணிக்கையிலான அமெரிக்கா படைகள் விலக்கிக் கொள்ளப்பட்டன.
தற்போது 9,800 அமெரிக்கா ராணுவ வீரர்கள் அந்நாட்டில் முகாமிட்டுள்ளனர். இவர்களும் கூட படிப்படியாக விலக்கிக் கொள்ளப்படுவர் என அமெரிக்கா கூறி வந்தது.
தற்போது இந்த நிலைப்பாட்டில் இருந்து அமெரிக்கா அதிரடியாக பல்டி அடித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் 2016ஆம் ஆண்டுக்குப் பின்னரும் அமெரிக்கா ராணுவத்தினர் தங்கியிருப்பர் என அதிபர் ஒபாமா அறிவித்துள்ளார்.
தலிபான்கள் மற்றும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் அச்சுறுத்தலைத் தொடர்ந்தே ஒபாமா இந்த நிலைப்பாட்டை மேற்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.