இன்று அமெரிக்க அதிபர் தேர்தல்: ஒரே மேடையில் ஒபாமா, ஹிலரி இறுதி கட்டப் பிரச்சாரம்!
பிலடெல்ஃபியா(யு.எஸ்): இன்று செவ்வாய்க்கிழமை, நவம்பர் 8ம் தேதியுடன் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நிறைவு பெறுகிறது. தேர்தல் நாள் இதுதான் என்றாலும், முன்
வாக்குப்பதிவு ஒரு மாதத்திற்கு மேலாக சில மாநிலங்களில் நடைபெற்று வருகிறது.
அனைத்து மாநிலங்களிலும் முன் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றுள்ளது. தேர்தலுக்கு முந்தய நாளான திங்கட்கிழமை இரண்டு வேட்பாளர்களும் தங்களது பிரச்சாரத்தை நிறைவு செய்தனர்.
அதிபர் ஒபாமா, மிஷல் ஒபாமா, பில் க்ளிண்டன், மகள் செல்சி க்ளிண்டன் சகிதம் ஹிலரி பிலடெல்ஃபியா இண்டிபெண்டன்ஸ் அரங்கத்தில் பிரச்சாரம் செய்தார். 20 ஆயிரம் பேர்களுக்கும் மேலாக அங்கு திரண்டு இருந்தனர்.
பிலடெல்ஃபியாவை உள்ளடக்கிய பென்சில்வேனியா மாநிலத்தில் ஹிலரி முன்னிலையில் இருக்கிறார். இந்த மாநில வெற்றி அவருக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
இந்த பிரச்சாரத்தில் மிஷல் ஒபாமா பேசுகையில், இந்த தேர்தல் நம் கையில் இருக்கிறது. நாம் அனைவரும் நாளை வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களித்தால் ஹிலரி வெற்றி பெறுவார். நமது கடமையை தவறாமல் நிறைவேற்றுவோம் என்று வேண்டுகோள் விடுத்தார்.
ஹிலரியை அறிமுகம் செய்து வைத்துப் பேசிய அதிபர் ஒபாமா, "45 வது அதிபரைத் தேர்ந்தெடுக்கும் நிலையில் நாம் இருக்கிறோம். ஹிலரியை வெற்றிப் பெறச்செய்தால், வளர்ச்சிப் பாதையில் நாடு தொடர்ந்து நடை போடும். இன்னும் செய்து முடிக்க வேண்டிய வேலைகளை அவர் செய்து முடிப்பார்," என்றார்.
மேலும், "அமெரிக்கர்கள் ட்ரம்பைத் தேர்ந்தெடுக்க மாட்டார்கள்," என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
ஹிலரி பேசும் போது, "இந்த தேர்தலில் பெண்களுக்கு எதிராக ட்ரம்ப் நிறைய சொல்லிவிட்டார். இஸ்லாமியர்கள், லத்தீன் இனத்தவர்கள் , ஆப்பிரிக்க-அமெரிக்கர்கள் உட்பட சிறுபான்மை இனத்தவர்களை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதற்கான முடிவை நாளைய தேர்தலில் நாம் காண்பிப்போம்," என்று சொல்லி முடித்தார். பென்சில்வேனியாவின் ஸ்க்ரான்டன் நகரில் பிரச்சாரம் செய்த டொனால்ட் ட்ரம்ப்,
பென்சில்வேனியாவைக் கைப்பற்றுவேன் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். "கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி வெற்றி பெறுவோம். தேர்தல் முறைகேடுகள் நடந்துள்ளது தோல்வியின் அடையாளம்," என்றும் ஹிலரி விமர்சித்தார்.
சின் என் என் கருத்துக் கணிப்பு ஹிலரிக்கு தேசிய அளவில் 46 சதவீதமும், ட்ரம்புக்கும் 42 சதவீதமும் ஆதரவு இருப்பதாகத் தெரிவிக்கிறது. கடும் போட்டி நிலவும் மாநிலங்களில் இழுபறி நிலை நீடிப்பதாகவும் அந்த கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் நாளை விடியும் போது பெரும்பான்மையான மாநிலங்களில் அமெரிக்க தேர்தல் வாக்குப் பதிவுகள் முடிந்து, எண்ணிக்கை ஆரம்பமாகி இருக்கும். மதியத்திற்குள் அடுத்த அமெரிக்க அதிபர் ஹிலரியா அல்லது ட்ரம்பா என்று தெரிந்து விடும்.
உலகத்தின் அதிகார மிக்க பதவியான அடுத்த அமெரிக்க அதிபர் யார் என்று தெரிந்து கொள்ள, அமெரிக்க வாக்காளர்களுடன் நாமும் காத்திருப்போம்.
- இர தினகர்