பிடல் காஸ்ட்ரோ இறுதி சடங்கில் பங்கேற்காமல் ஒபாமா தவிர்ப்பு.. காரணம் டொனால்ட் ட்ரம்ப்
அரசியல் மாற்ற சூழ்நிலையால் கியூபா முன்னாள் அதிபர் பிடல்காஸ்ட்ரோவின் இறுதி சடங்கில் அமெரிக்க அதிபர் ஒபாமாவால் பங்கேற்க இயலவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹவான்னா: கியூபாவின் முன்னாள் அதிபர் மறைந்த பிடல் காஸ்ட்ரோவின் இறுதிச் சடங்கில் அரசியல் மாற்ற சூழல் காரணமாக அமெரிக்க அதிபர் ஒபாமா பங்கேற்க இயலாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கியூபா முன்னாள் அதிபர் பிடல்காஸ்ட்ரோ (90) இந்திய நேரப்படி, கடந்த சனிக்கிழமை மரணம் அடைந்தார். அதை தொடர்ந்து அவரது உடல் எரியூட்டப்பட்டது. அஸ்தி சேகரிக்கப்பட்டு பொது மக்கள் அஞ்சலிக்காக தலைநகர் ஹவான்னாவில் உள்ள புரட்சி சதுக்கத்தில் வைக்கப்பட்டுள்ளது.
அரசியல் மாற்ற சூழல்:
அவரது அஸ்திக்கு ஆயிரக்கணக்கான கியூபா மக்கள் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பிடல்காஸ்ட்ரோவின் இறுதி சடங்கு வருகிற 4-ந்தேதி நடக்கிறது.
பிடல்காஸ்ட்ரோவுக்கு உலக தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்த கியூபா வரத் தொடங்கியுள்ளனர்.
ஆனால் அண்டை நாடான அமெரிக்காவின் அதிபர் ஒபாமா இந்த இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டார் எனவும், மாறாக ஹவான்னாவில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் ஜெப்ரி டிலாரன்டிஸ், பென் ரோட்டஸ் ஆகியோர் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா சார்பிலும் ராஜ்நாத்சிங் தலைமையிலான அனைத்து கட்சி குழுவினர் பிடல்காஸ்ட்ரோவின் இறுதிச் சடங்கில் பங்கேற்க உள்ளனர்.
சமீபத்தில் சமரசம்:
அமெரிக்காவுக்கும், கியூபாவுக்கும் இடையே 50 ஆண்டுகளாக பனிப்போர் நடந்து வந்தது. அதை அதிபர் ஒபாமா முடிவுக்கு கொண்டு வந்தார். அதன்படி, பேச்சுவார்த்தை மூலம் இரு நாடுகளுக்கு இடையே சமீபத்தில் தான் சமரசம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து தற்போது தான் தூதரக உறவு மலர்ந்துள்ளது. ஆனால் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் கியூபாவுக்கு எதிரான நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
ட்ரம்ப் நிலைப்பாடு
பிடல்காஸ்ட்ரோவை கொடூர சர்வாதிகாரி, கொடுங்கோலன் என டிரம்ப் வர்ணித்துள்ளார். தற்போதுள்ள அரசியல் மாற்ற சூழ்நிலையால் இறுதி சடங்கில் ஒபாமா பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கியுபாவின் முன்னாள் அதிபர் மறைந்த பிடல் காஸ்ட்ரோவின் இறுதிச் சடங்கில் அரசியல் மாற்ற சூழல் காரணமாக அமெரிக்க அதிபர் ஒபாமா பங்கேற்க இயலாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.