ட்ரம்புக்கு கடும் எதிர்ப்பு- நடைமுறைக்கு மாறாக பத்தே நாளில் மௌனம் கலைத்த ஒபாமா!
வாஷிங்டன்(யு.எஸ்). அதிபர் பதவியை விட்டு இறங்கிய பத்தாவது நாளில், முன்னாள் அதிபர்கள் பின்பற்றி வரும் நடைமுறைக்கு மாறாக, புதிய அதிபர் ட்ரம்பின் அரசாணை பற்றி குற்றம் சாட்டியுள்ளார் ஒபாமா.
பொதுவாக பதவியில் இருந்து இறங்கிய பிறகு முன்னாள் அதிபர்கள், அடுத்து ஆட்சியில் அமர்ந்துள்ள அதிபரின் செயல்பாடுகள் பற்றி கருத்து தெரிவிப்பதில்லை.
ஜார்ஜ் புஷ், பதவியில் இருந்து இறங்கிய பிறகு, கடந்த எட்டாண்டுகளில் எப்போவதுதான் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அதிலும் அரசியல் சார்ந்த கருத்துக்கள் கூறுவதில்லை.
ஒபாமா அரசியலில் தொடர்ந்து இருப்பேன் என்று கோட்டிட்டுக் காட்டியிருந்தார். ஆனால் இவ்வளவு விரைவில் அதுவும் குடும்பத்துடன் விடுமுறையில் இருக்கும் நிலையில் அதிபர் ட்ரம்ப் மீது குற்றம் சாட்டுவார் என்று யாரும் எதிர்ப் பார்க்கவில்லை.
முன்னதாக ட்ரம்ப், ஒபாமா ஈராக் அகதிகள் மீது 2011ம் ஆண்டும் ஆறு மாதம் தடை
விதித்திருந்தது போலத்தான் தற்போதைய தடையும் என்று கூறியிருந்தார்.
ட்ரம்பின் ஆணையை முற்றிலும் நிராகரிக்கிறேன்..
தன்னுடைய பத்திரிக்கை தொடர்பாளர் கெவின் லூயிஸ் மூலம் ஒபாமா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ட்ரம்ப் கூறுவதைப் போல் ஈராக் அகதிகள் தடையையும் தற்போதைய 7 நாடுகள் தடையையும் ஒப்பிட முடியாது.
ஒருவருடைய மத நம்பிக்கையை அடிப்படையாக் கொண்டு, தடை விதிக்கப்பட்டுள்ளதை ஏற்றுக் கொள்ள இயலாது.
2011ம் ஆண்டு அகதிகள் விசாவைத் தடை செய்யவில்லை, அவர்கள் விசா வைத்துக் கொண்டு வருவதும் இல்லை. ஈராக் குடிமக்கள் மற்றும் 6 நாடுகளிலிருந்து வந்த அகதிகளுக்கு அனுமதி வழங்கும் நடைமுறையில் தீவிர கண்காணிப்புதான் மேற்கொள்ளப்பட்டது. ட்ரம்ப் போல் க்ரீன் கார்டு, முறைப்படி விசா வைத்திருந்தவர்களைத் தடை செய்யவில்லை.
இந்த தடையை எதிர்த்து மக்கள் எழுச்சியுடன் போராடுவதைப் பார்த்து பெருமிதம் அடைகிறேன். வாக்களிப்பதுடன் ஜனநாயகக் கடமை முடிந்து விடவில்லை. ஆட்சியாளார்கள் நமது அடிப்படை உரிமைகளுக்கு எதிராக செயல் படும் போது, போராட்டங்கள் மூலம் அவர்களுக்கு நமது எதிர்ப்பைத் தெரிவிப்பதுவும் ஜனநாயகக் கடமையாகும் என்று ஒபாமா கூறியுள்ளார்.
இது ஒபாமா லிஸ்ட் - ட்ரம்ப் தகவல்
இந் நிலையில் இந்த ஏழு நாடுகள் பட்டியல் ஒபாமா அரசால் தீர்மானிக்கப்பட்டது. நாட்டின் பாதுக்காப்புக்காக அவசர நிலை கருதி இந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டியதாயிற்று. முஸ்லீம்களைக் குறி வைத்து இந்த தடை விதிக்கப்படவில்லை. தீவிரவாதச் செயல்கள் நாட்டுக்குள் நடைப் பெறக்கூடாது என்பதற்கான தடுப்பு நடவடிக்கையே இது என்று ட்ரம்ப் கருத்துத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே தங்களிடம் கலந்து ஆலோசிக்கவில்லை, ஆணையில் உள்ள வாசகங்களும் சரியான வல்லுநர்களைக் கொண்டு எழுதப்பட வில்லை என்று, ட்ரம்பின் குடியரசுக் கட்சியினரே அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
குடியரசுக் கட்சியின் செனட் மற்றும் காங்கிரஸ் அவை உறுப்பினர்கள் சிலர் வெளிப்படையாக, இந்த தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள விதம் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
இந்த தடை உத்தரவை செனட் அவையின் தீர்மானம் மூலம் நீர்த்துப் போகச் செய்ய ஜனநாயகக் கட்சியின் சக் சூமர் முயற்சி எடுத்து வருகிறார். குடியரசுக் கட்சி உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று இதை நிறைவேற்ற முடியும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப் மீது அதிருப்தி இருந்தாலும், அவர் பதவியேற்ற பத்தாவது நாளிலேயே, எதிர்க்கட்சியினருடன் இணைந்து செயல்பட வாய்ப்பிருப்பதாக தெரியவில்லை.
அதிபர் ட்ரம்பின் அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகள் மற்றும் ஆணைகள் அமெரிக்காவுக்கே புதியதாகத்தான் இருக்கிறது.
-இர தினகர்