ஈரான் அணு ஆயுதம் தயாரிக்க ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது: ஒபாமாவிடம் செளதி மன்னர் வலியுறுத்தல்
ரியாத்: செளதி அரேபியா வந்த அமெரிக்கா அதிபர் ஒபாமாவிடம் ஈரான் அணு ஆயுத தயாரிக்க ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என்று புதிய மன்னர் சல்மான் வலியுறுத்தியுள்ளார்.
செளதி மன்னர் அப்துல்லா காலமானத்தைத் தொடர்ந்து அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா நேற்று செளதி அரேபியா வருகை தந்தார். செளதி அரேபியா பயணத்துக்காகவே இந்தியாவின் ஆக்ரா பயணத்தை ரத்து செய்துவிட்டு ஒபாமா வருகை தந்தார்.
ஒபாமாவின் இந்த பயணமானது அமெரிக்க-செளதி எண்ணெய் வள ஒத்துழைப்பு மற்றும் வளைகுடா அரபு பிராந்திய பாதுகாப்பு ஆகிய விஷயங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
ஒபாமாவுடனான பேச்சுவார்த்தையின் போது ஈரான் ஒருபோதும் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டுவிட அனுமதித்துவிடக் கூடாது என்று புதிய மன்னர் சல்மான் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் அண்டை நாடான ஏமனில் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் கை ஓங்கியிருப்பது, அங்கு அரசியல் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்துள்ளனர்.
ஈராக், சிரியாவில் விஸ்வரூபமெடுத்து தனிநாடு அமைத்திருக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒடுக்குவது தொடர்பாகவும் இந்த சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டது. இவை தவிர, சர்வதேச எண்ணெய் சந்தையில் செளதியின் தொடர்ச்சியான பங்களிப்பு குறித்தும் இருநாட்டு தலைவர்களும் விவாதித்தனர்.