அணுசக்தி விவகாரம்.. ஈரானுடன் ஒப்பந்தம் இல்லைன்னா யுத்தம்தான் நடத்தனும்..: ஒபாமா 'பொளேர்' பதில்
வாஷிங்டன்: அணுசக்தி கட்டுப்பாடு விவகாரத்தில் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பது அல்லது யுத்தம் மூலம் தீர்வு ஏற்படுத்துவது என்ற இரு வாய்ப்புகளைத் தவிர வேறு எதுவுமே இல்லை; அதனால்தான் பேச்சுவார்த்தை மூலம் ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளது என்று அமெரிக்கா அதிபர் ஒபாமா திட்டவட்டமான பதிலளித்துள்ளார்.
அமெரிக்கா உள்ளிட்ட 6 நாடுகளுடன் ஈரான் வரலாற்றுச் சிறப்புமிக்க அணுசக்தி கட்டுப்பாடு ஒப்பந்தத்தை மேற்கொண்டிருக்கிறது. இந்த ஒப்பந்தத்துக்கு இஸ்ரேலும் அந்நாட்டு ஆதரவு அமெரிக்கா எம்.பி.க்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த ஒப்பந்தம் உருவான நாள் 'வரலாற்றில் கருப்பு நாள்' என்று இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது. மேலும் அணுஆயுதம் தாங்கிய ஒரு பயங்கரவாத தேசமாக ஈரான் உருவெடுத்துவிட்டது என்றும் இஸ்ரேல் கடுமையாக விமர்சித்திருந்தது.
இந்த விமர்சனங்களுக்கு அமெரிக்கா அதிபர் ஒபாமா அளித்துள்ள பதில்:
- ஈரான் அணுசக்தி கட்டுப்பாடு விவகாரத்துக்கு ராஜதந்திர ரீதியிலான பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காணப்பட வேண்டும்; அல்லது யுத்தத்தின் மூலமாக தீர்வு எட்டப்பட வேண்டும். நாங்கள் பேச்சுவார்த்தை மூலம் உடன்பாடு செய்துள்ளோம்.
- ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்க்கும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உள்ளிட்டோர் இந்த இரண்டுக்கும் மாற்றாக என்ன தீர்வை கையில் வைத்திருக்கிறார்கள்?
- அணுசக்தி ஒப்பந்தத்தை விமர்சிப்பவர்கள், ஈரானின் அணுசக்தியை முற்றாக அமைதிவழியிலோ அல்லது வேறு ஏதேனும் ஒருவழியிலோ "அழித்துவிட" வேண்டும் என்கிறார்கள்.. அது நடைமுறை சாத்தியம் இல்லாதது.
- இந்த ஒப்பந்தத்தால் மத்திய கிழக்கில் நிலைமை மேலும் மோசமாகிவிடும் என்றும் கூறுகிறார்கள்.. எங்களைப் பொறுத்தவரை இந்த ஒப்பந்தம் என்பது ஈரான் நாடானது அணு ஆயுதத்தைத் தயாரிப்பதை தடுத்து நிறுத்தும். அதைத் தவிர வேறு எதுவுமே நடக்காது.
- அணு ஆயுதத்தை ஈரான் வைத்திருப்பது அமெரிக்காவும் அதன் நேச நாடுகளுக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் என்கிறார்கள்.. எங்களைப் பொறுத்தவரையில் ஈரான் அணு ஆயுதத்தை வைத்திருந்தாலும் வைத்திருக்காவிட்டாலும் அமெரிக்காவின் நலன்களுக்கு அந்நாடு எதிரானதாக இருந்தால் அதை எதிர்கொள்ள தயாராகவே இருக்கிறோம்.
- தீவிரவாதிகளுக்கு ஈரான் மறைமுகமாக உதவி வருவதற்கு அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் ஒருங்கிணைந்து நெருக்கடி கொடுப்பதற்கு இந்த அணுசக்தி ஒப்பந்தம் உதவி உள்ளது.
- 4 அமெரிக்க நாட்டவர் ஈரான் சிறையில் இருக்கும் போது அந்நாடுடன் எப்படி அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டீர்கள் என கேள்வி கேட்கிறார்கள்.. தற்போது இந்த ஒப்பந்தம் கையெழுத்திட்டிருப்பதன் மூலம் அமெரிக்க நாட்டவர் சிறையில் இருந்து விடுவிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உருவாகி இருக்கிறது.
இவ்வாறு ஒபாமா கூறியுள்ளார்.