பாரீஸில் ஒபாமா- பயங்கரவாத தாக்குதல் நடைபெற்ற இடத்தில் அஞ்சலி! பிரதமர் மோடியையும் சந்திக்கிறார்...
பாரீஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய இடத்தை அமெரிக்கா அதிபர் ஒபாமா இன்று நேரில் பார்வையிட்டு அஞ்சலி செலுத்தினார். அவருடன் பிரான்ஸ் அதிபர் ஹோலண்டேவும் உடன் சென்று அஞ்சலி செலுத்தினார்.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் கொடூரத் தாக்குதலை நடத்தியிருந்தனர். இத்தாக்குதலில் மொத்தம் 130 அப்பாவி பொதுமக்கள் பலியாகி இருந்தன. இந்தியாவின் மும்பையில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் பாணியில் தீவிரவாதிகள் பாரீஸ் நகருக்குள் ஊடுருவி பல இடங்களை துப்பாக்கி முனையில் ஆக்கிரமித்து இக்கொடூர தாக்குதலை நடத்தியிருந்தனர்.
இந்நிலையில் பருவநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச உச்சி மாநாட்டில் பங்கேற்க அமெரிக்கா அதிபர் ஒபாமா பாரீஸ் வருகை தந்துள்ளார். அவர் பிரான்ஸ் அதிபர் ஹாலண்டேவுடன் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பகுதியைப் பார்வையிட்டு உயிரிழந்தோருக்கு அங்கு மலர் அஞ்சலி செலுத்தினார். பாரீஸ் வருகை தந்த உடனேயே பயங்கரவாத தாக்குதல் நடந்த பார்வையிட்டு ஒபாமா அஞ்சலி செலுத்தியிருப்பது பிரான்ஸ் நாட்டுக்கான அமெரிக்காவின் ஆதரவை உறுதிப்படுத்தியிருக்கிறது.
இதனிடையே இந்தபருவ நிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் கலந்து கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி, ஒபாமாவை சந்தித்து பேச உள்ளார். இந்த சந்திப்பின் போது பயங்கரவாதம் உள்ளிட்ட இருநாடுகளும் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், இருதரப்பு உறவுகள் குறித்து இரு தலைவர்களும் விவாதிக்க உள்ளனர். இதன் பின்னர் ஒபாமா, மோடி ஆகியோர் செய்தியாளர்களையும் சந்திக்கக் கூடும் எனவும் தெரிகிறது.
மோடி- ஹாலண்டே, நவாஸ் ஷெரீப் சந்திப்பு
இதனிடையே இந்த மாநாட்டின் போது பிரான்ஸ் அதிபர் ஹாலண்டே, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஆகியோரை பிரதமர் மோடி இன்று பாரீஸில் சந்தித்து பேசினார்.
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புடனான மோடியின் இச்சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.