உலகின் பெரும் ஜனநாயக நாடான இந்தியாவுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம்: அமெரிக்கா உறுதி
வாஷிங்டன்: அமெரிக்காவுக்கு 5 நாள் சுற்றுப் பயணமாக சென்றுள்ள நரேந்திரமோடி, அங்கு அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் இரு நாட்டு தொழில் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து ஆலோசிக்க உள்ளதாக தெரிவித்த, வெள்ளை மாளிகைக்கான மீடியா செயலாளர் ஜோஷ் எர்னஸ்ட், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பு நாடு அந்தஸ்து தருவதற்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கும் என்றும் தெரிவித்தார்.
வெள்ளை மாளிகை பத்திரிகையாளர் செயலாளர் ஜோஷ் எர்னஸ்ட் கூறியதாவது: இந்திய பிரதமர் நரேந்திரமோடியும், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும், இரு நாட்டு தொழில் வளர்ச்சிகள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.
அமெரிக்க முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய அதிக வாய்ப்பை உருவாக்குவதற்கும், அமெரிக்காவில் வேலை வாய்ப்பை அதிகரிப்பதற்கும், இந்த சந்திப்பில் முக்கியத்துவம் தரப்படும்.
அமெரிக்காவில் தொழில் தொடங்க முன்வரும் இந்திய தொழிலதிபர்களுக்கும், உரிய வசதிகள் செய்துதரப்படும். இரு நாடுகளுக்கும் நல்லது நடைபெற வேண்டும் என்பது இத்தலைவர்கள் சந்திப்பின் நோக்கம்.
2010ம் ஆண்டு, ஓபாமா முதல்முறையாக இந்தியா சென்றபோதே, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் கிடைக்க அமெரிக்கா ஆதரவு அளிக்கும் என்றார். அதே நிலைப்பாட்டில்தான் அமெரிக்கா இப்போதும் உள்ளது. பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பு நாடுகள் கட்டமைப்பை மாற்றியமைக்க ஐ.நா சம்மதித்துள்ளது நாம் அறிந்ததே.
இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு. அதன் பொருளாதாரம் வளர்ச்சி பாதையில் தொடர்ந்து சென்று கொண்டுள்ளது. உலக நாடுகள் மத்தியில் இந்தியாவின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இந்த சூழ்நிலையில், பன்னாட்டு நடவடிக்கைகளில் இந்தியாவுக்கு கூடுதல் பொறுப்பை வழங்குவதுதான் சரியானதாக இருக்க முடியும்.