கொலம்பியாவின் ”கொழுகொழு” 8 மாத 19 கிலோ குழந்தை...
வல்லெட்பார்: கொலம்பியாவைச் சேர்ந்த 8 மாத குழந்தை அதிக உடல் எடை அதிகரிப்பால் பாதிக்கப் பட்டுள்ளது.தற்போது அந்த குழந்தை 19.5 கிலோ எடையில் உள்ளது.
கொலம்பியாவை சேர்ந்தவர் யுனைஸ் ஃபேண்டினோ என்ற பெண்மணி. இவர் தனது குழந்தையான எட்டு மாத சாண்டியாகோ மெண்டோசாவுக்கு நாளுக்கு நாள் எடை அதிகரிப்பதாக ஷப்பி ஹார்ட்ஸ் என்ற இருதய நல மருத்துவமனைக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இவரது கடிதத்தை கண்ட மருத்துவமனை இயக்குனரான சால்வடார் பாலேசியோ கோன்சாலேஸ் போகாட்டாவிலுள்ள தங்களது மருத்துவமனையில் அக்குழந்தையை சேர்த்து சிகிச்சை அளித்து வருகிறார். தனது குழந்தை குண்டாவதற்கு தானே காரணம் என அவனது தாய் மருத்துவரிடம் கூறினார். அவன் எப்பொழுது அழுதாலும் உடனடியாக பாலூட்டியதாலே அவன் இவ்வளவு பருமன் ஆனதாக அவர் தெரிவித்தார்.
தற்போது அவனது உடல் எடையை குறைக்க அறுவை சிகிச்சை செய்ய மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்துள்ளது. எடை குறைக்கப்படாவிட்டால் வருங்காலத்தில் அந்த குழந்தைக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி மற்றும் மூட்டு வலி ஏற்பட வாய்ப்பிருப்பதாக மருத்துவ துறை இயக்குனர் கோன்சாலேஸ் மேலும் தெரிவித்தார்.