எபோலா நோய்க்கு இதுவரை 5,000 பேர் பலி – உலக சுகாதார நிறுவனம் தகவல்!
ஜெனீவா: ஆப்ரிக்காவில் வேகமாகப் பரவி வரும் எபோலா நோய்க்கு இதுவரையில் 5,000 பேர் பலியாகியுள்ளதாக உலக சுகாதர நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆப்பிரிக்காவில் உள்ள லைபீரியா, கினியா, சியாராலியோன் ஆகிய நாடுகளில் எபோலா நோய் பரவி வருகிறது.
நோயை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு நிலைமை மோசமாக சென்றுள்ளது.
ஐநாவில் ஆலோசனைக் கூட்டம்:
இதையடுத்து நேற்று ஐ.நா சபையின் அவசர ஆலோசனை கூட்டம் ஜெனீவாவில் நடந்தது.
எபோலா நோய் பாதுகாப்பு:
உலக சுகாதார நிறுவனத்துடன் இணைந்து இந்த கூட்டம் நடத்தப்பட்டது. அதில் எபோலா நோயை எப்படி கட்டுப்படுத்துவது என்பது பற்றி விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை:
நோய் தாக்கிய நாடுகளில் இருந்து வெளிநாடுகளுக்கு பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேலும் அதிகப்படுத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது.
பயணிகள் தீவிர கண்காணிப்பு:
இந்த 3 நாடுகளிலும் 5 இடங்களில் சர்வதேச விமான நிலையம் உள்ளது. அங்கிருந்து செல்லும் அனைத்து பயணிகளையும் கடுமையான சோதனைக்கு பிறகு வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய அனுமதிப்பது, மேலும் அந்த நாடுகளில் இருந்து வரும் பயணிகளை அனைத்து நாடுகளும் தீவிரமாக கண்காணிப்பது ஆகிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
கனடா விஞ்ஞானிகளின் புதிய மருந்து:
எபோலா நோயை கட்டுப்படுத்தும் புதிய மருந்து ஒன்று கனடா மருத்துவ விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். அந்த மருந்தை உடனடியாக பயன்படுத்துவது தொடர்பாக விரிவான ஆய்வு நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.