சிக்னல் கிடைத்த இடத்தில் எண்ணெய் படலம்: மாயமான விமானத்தில் இருந்து வந்ததா?
பெர்த்: மலேசிய விமானத்தை தேடும் கடல் பகுதியில் எரிபொருள் மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்த மலேசிய விமானத்தின் கருப்புப் பெட்டியில் இருந்து 4 முறைக்கு மேல் சிக்னல்கள் கிடைத்தது. ஆனால் அதை வைத்து கருப்புப் பெட்டியை கண்டுபிடிக்க முடியாமல் போனது. இதற்கிடையே கருப்புப் பெட்டியின் பேட்டரியின் ஆயுள் முடிந்து அதில் இருந்து வரும் சிக்னல்களும் அடங்கிவிட்டன.
இந்நிலையில் விமானத்தை தேடும் பகுதியில் எரிபொருள் மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த எரிபொருள் கடலுக்கு அடியில் 5 ஆயிரத்து 500 மீட்டர் ஆழத்தில் இருந்து வந்துள்ளது.
இது குறித்து தேடல் பணிக்கு தலைமை வகிக்கும் அதிகாரி ஆங்கஸ் ஹூஸ்டன் கூறுகையில்,
விரைவில் நீர்மூழ்கி கப்பலை வைத்து விமானத்தை தேடவிருக்கிறோம். கடந்த 6 நாட்களில் ஒரு சிக்னல் கூட கிடைக்கவில்லை. நீருக்கு அடியில் சென்று தேடும் நேரம் வந்துவிட்டது. இந்நிலையில் தேடல் பகுதியில் எண்ணெய் மிதந்தது. சுமார் இரண்டு லிட்டர் அளவுக்கு மிதந்த எரிபொருளை சேகரித்து சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சிக்னல் கிடைத்த இடத்தில் தான் எண்ணெய் மிதந்துள்ளது. இந்த எண்ணெய் தேடல் பணியில் ஈடுபட்டுள்ள கப்பல்களில் இருந்து வந்தது இல்லை என்றார்.