அப்பாஸ் தாத்தா காலமானார்.. வயது 123
உலகின் மிக வயதான நபரான அப்பாஸ் காலமானார்.
மாஸ்கோ: உலகின் மிக வயதான ஆணாகக் கருதப்படும் ரஷ்யாவைச் சேர்ந்த அப்பாஸ் இலியிவ், தனது 123 வது வயதில் காலமானார்.
உலகின் மிக வயதான மனிதர் என்ற சாதனையைப் படைத்தவர் ரஷியாவைச் சேர்ந்த அப்பாஸ் இலியிவ். இவர் 1896ம் ஆண்டு இன்குஷியா என்ற பகுதியில் பிறந்ததாக அவரது சான்றிதழ்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
1917 முதல் 1922 வரை ராணுவத்தில் பணியாற்றிய அப்பாஸ் இரண்டாம் உலகப் போரில் கலந்து கொண்டனர். தனது 45 வயதில் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற அப்பாஸ், அதனைத் தொடர்ந்து டிராக்டர் டிரைவராக பணி புரிந்தார்.
பச்சை காய்கறிகளும், சுத்தமான பசுவின் பாலுமே இவரது தினசரி உணவு. அதோடு, தினமும் 11 மணி நேரம் தூங்கும் பழக்கத்தையும் அப்பாஸ் கொண்டிருந்தார். எவ்வித போதை பழக்கமும் அவருக்கு கிடையாது. இதனால் நன்றாக ஆரோக்கியமாக வாழ்ந்து வந்த அப்பாஸ், தனது வாழ்நாளில் இதுவரை ஒரு முறைகூட மருத்துவமனைக்கு சென்றதில்லையாம்.
இந்நிலையில், நேற்று முன்தினம் அப்பாஸ் காலமானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அப்பாஸ் இலியிவுக்கு 8 பிள்ளைகளும், 35 பேரப்பிள்ளைகளும், 34 கொள்ளுப் பேரப்பிள்ளைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.