பாரீஸ் தியேட்டரில் தாக்குதல் நடத்திய உமர் இஸ்மாயில் முஸ்தபா யார்?
பாரீஸ்: பாரீஸில் உள்ள படாகிளான் தியேட்டரில் தாக்குதல் நடத்திய உமர் இஸ்மாயில் முஸ்தபாவை சிறு சிறு குற்றங்கள் செய்தவராகத் தான் போலீசாருக்கு தெரிந்துள்ளது.
பாரீஸ் நகரில் 6 இடங்களில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 129 பேர் பலியாகியுள்ளனர், 352 பேர் காயம் அடைந்துள்ளனர். படாகிளான் தியேட்டரில் தாக்குதல் நடத்திய தீவரிவாதிகளில் ஒருவர் பாரீஸை சேர்ந்த உமர் இஸ்மாயில் முஸ்தபா என்பது தெரிய வந்துள்ளது.
சம்பவ இடத்தில் கிடந்த விரலை வைத்து போலீசார் உமரை அடையாளம் கண்டுள்ளனர். அவர் பாரீஸின் புறநகர் பகுதியான கோர்கோரன்னஸில் 1985ம் ஆண்டு நவம்பர் மாதம் 21ம் தேதி பிறந்தார். அவர் 2004ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரை சிறு சிறு குற்றங்களுக்காக சிக்கியுள்ளார். ஆனால் சிறை தண்டனை விதிக்கப்படவில்லை.
உமர் கடந்த ஆண்டு சிரியாவுக்கு சென்று வந்தாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். உமரை அடையாளம் கண்டதும் போலீசார் அவரின் தந்தை மற்றும் அண்ணனை கைது செய்து விசாரித்து வருகிறார்கள். மேலும் அவர்களின் வீடுகளிலும் தீவிர சோதனை நடத்தினர்.
பாரீஸ் தாக்குதல்களில் உமருக்கு தொடர்பிருந்தது தெரிய வந்ததும் அவரின் சகோதரர் போலீசில் சரண் அடைந்துள்ளார்.
உமரின் சகோதரர் கூறுகையில்
உமர் சிறு சிறு குற்றங்கள் செய்து வந்தது எனக்கு தெரியும். ஆனால் அவர் இப்படி ஒரு தாக்குதலை நடத்துவார் நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. நான் பல ஆண்டுகளாக அவருடன் தொடர்பில் இல்லை. என் தாய்க்கு போன் செய்தேன். அவருக்கும் உமரின் நடவடிக்கைகள் பற்றி எதுவும் தெரியவில்லை என்றார்.
உமர் பாரீஸின் தென்மேற்கில் உள்ள லூஸ் பகுதியில் இருக்கும் மசூதிக்கு தினமும் சென்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது.