”தொழில்நுட்பம் நிறைந்த சமூகத்தில்தான் நாம் வாழ்கின்றோம்” - சி.ஓ.க்கள் சந்திப்பில் பிரதமர் மோடி பேச்ச
நியூயார்க்: அமெரிக்காவில் நடைபெற்ற தலைமை செயல் அதிகாரிகள் சந்திப்பில் பிரதமர் நரேந்திர மோடி, "நாம் தொழில்நுட்பம் சார்ந்த சமூகத்தில் வாழ்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
நியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் பிரதமர் மோடி இன்று உரையாற்றுகிறார். அதே நேரத்தில், இந்தியாவிற்கு முதலீடு ஈர்க்கும் விதமாக, அமெரிக்காவில் செயல்படும் பல்வேறு நிதி நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளையும் பிரதமர் மோடி நேரில் சந்தித்துப் பேசினார்.
அமெரிக்காவின் நிதித் தலைநகராகத் திகழும் நியூயார்க் நகரில், ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பிரதமர் மோடி இன்று உரையாற்றுகிறார். இதற்காக நியூயார்க் சென்றுள்ள அவர், ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்துள்ள பல்வேறு நாடுகளின் தலைவர்களையும் சந்தித்துப் பேசினார். வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனாவை நேற்று சந்தித்த பிரதமர் மோடி, இருநாட்டு உறவுகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசித்ததாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ஷேக் ஹசீனாவின் மகன், சஜீப் வசெத் மற்றும் இரு நாட்டு அதிகாரிகள் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.
இதனிடையே, அமெரிக்காவின் முன்னணி நிதி நிறுவனங்களின் தலைவர்களை பிரதமர் மோடி நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது, இந்தியாவில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் குறித்து அவர்களுடன் விரிவாக ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, முதலீட்டு வாய்ப்புகளுக்கு தடையாக இருக்கும் முட்டுக்கட்டைகளை பாஜக அரசு விரைவில் நீக்கும் எனவும் உறுதியளித்தார். இந்தியா-அமெரிக்க வர்த்தக கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்ட மாஸ்டர்கார்டு தலைமை நிர்வாக அதிகாரியும், சேர்மனுமான அஜய் பங்காவை மோடி சந்தித்து உரையாடினார்.
செஞ்சுரி பாக்ஸ், சோனி, டிஸ்கவரி, டைம் வார்னர், ஏ அண்டு இ, வைஸ் மீடியா இவையனைத்தையும் ஒருங்கிணைக்கும் ரூபர்ட் முர்டோக் நியூஸ் கார்ப்பரேசன், டிஸ்கவரி, சோனி, ஈ.எஸ்.பி.என், டிஸ்னி இண்டஸ்ட்ரீஸ், ட்வெண்டி பர்ஸ்ட் செண்ட்யுரி பாக்ஸ், நியூஸ் கார்ப் போன்ற சர்வதேச ஊடக மற்றும் தொடர்பியல் நிறுவங்களின் தலைமை செயல் அதிகாரிகள் உள்ளிட்ட 47 தலைமை நிர்வாகிகள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.
ஊடகம் மற்றும் தொடர்பியல் தொழில்நுட்ப உலகின் சமீபத்திய நிலவரங்கள், மற்றும் அதில் இந்தியாவுக்கான வாய்ப்புகள் குறித்து இந்த நிறுவனங்களின் சி.இ.ஓக்களுடன் மோடி உரையாடினார். தனது 6 நாள் அமெரிக்க பயணத்தில், அதிபர் ஒபாமா உட்பட இன்னும் பல முக்கிய தலைவர்களை சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி பேசவுள்ளது குறிப்பிடத்தக்கது.
பின்னர் இக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திரமோடி, "நாம் தற்போது தொழில்நுட்பம் சார்ந்த சமூகத்தில் இருக்கிறோம். சர்வதேச முதலீடுகள் மற்ற நாடுகளில் குறைந்திருந்தாலும் இந்தியாவில் 40 சதவீதம் அதிகரித்துள்ளது. இது இந்திய பொருளாதாரத்தின் உறுதியைப் பறை சாற்றுகின்றது. " என கூறினார். வர்த்தக கவுன்சில் கூட்டம் முடிந்த பின்னர் நடந்த இரவு விருந்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.