யாருக்கும் அடிபணிந்து போகும் நிலை இனி இந்தியாவுக்கு ஏற்படாது... டுப்ளினில் மோடி எழுச்சி உரை
டுப்ளின்: அயர்லாந்தில் இந்தியர்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, இனி எக்காலத்திலும், இந்தியா யாருக்கும் அடிபணிந்து போகும் நிலை ஏற்படாது என பேசினார்.
பிரதமர் மோடி அரசு முறை பயணமாக அயர்லாந்து சென்றார். இதன் மூலம் கடந்த 60 ஆண்டுகளில் அயர்லாந்து சென்ற முதல் பிரதமர் என்ற பெருமையை நரேந்திர மோடி பெற்றார்.
அங்கு அந்நாட்டு பிரதமர் என்டா கென்னியை சந்தித்து பேசினார். அப்போது, மோடி என அச்சிடப்பட்ட அயர்லாந்து கிரிக்கெட் அணியின் டீஷர்ட் ஒன்றை மோடி பரிசளித்தார். அயர்லாந்து பிரதமரும், அந்நாட்டில் புகழ்பெற்ற விளையாட்டு பொருட்களை மோடிக்கு பரிசளித்தார்.
இதன் பின்னர் அயர்லாந்து பிரதமர் என்டா கென்னியும், பிரதமர் நரேந்திர மோடியும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, பேசிய என்டா கென்னி, இந்தியாவில் கிளீன் கங்கா மற்றும் இந்திய மாணவர்கள் கல்வி திட்டம் குறித்து நாங்கள் உதவி செய்வோம். இந்தியா மற்றும் அயர்லாந்து இடையேயான உறவு நீண்ட காலம் நிலைத்திருக்க வேண்டும். ஐ.நா.,வில் சீர்திருத்தம் கொண்டு வருவது குறித்தும் இருவரும் ஆலோசனை செய்தோம் என கூறினார்.
இதன் பின்னர் பிரதமர் மோடி பேசும் போது, எனக்கு அளிக்கப்பட்ட சிறப்பான வரவேற்புக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இந்தியாவும், அயர்லாந்தும் வேகமாக வளரும் பொருளாதார நாடுகள். இந்தியா, அயர்லாந்து இடையே விரைவில் விமான சேவை துவக்கப்படும். இரு நாடுகளுக்கு இடையே நெருக்கமான உறவு வேண்டும்.
ஐ.நா.,வில் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கைக்கு அயர்லாந்து ஆதரவு தெரிவித்துள்ளது. சர்வதேச அளவில் பொருளாதார பிரச்னை உள்ள நிலையில், இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம், முதலீடு, நட்பு வளர்ந்து வருகிறது. சுத்தமான எரிசக்தி, விவசாயம், மருத்துவம், உயிர் தொழில்நுட்பம், ஐ.டி., ஆகிய துறைகளை மையப்படுத்தி இரு நாடுகளின் உறவும் வலுப்படவேண்டும்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக ஆதரவு தர வேண்டும் என அயர்லாந்திடம் கோரிக்கை விடுத்தேன். ஐரோப்பா, அட்லாண்டிக் பகுதிகளை இணைக்கும் பாலமாக அயர்லாந்தை பார்க்கிறேன். அமைதி நடவடிக்கையில் இரு நாடுகளும் இணைந்து செயல்படும். பயங்கரவாதம் மற்றும் ஐரோப்பா, ஆசியாவில் நிலவும் சூழ்நிலை குறித்து விவாதம் செய்தோம்.
ரவீந்தர நாத் தாகூர் டபிள்யு பி யீட்ஸ் இடையிலான நட்பு மூலம் இந்தியா அயர்லாந்து இடையிலான நட்பு வலுவாக உள்ளது என கூறினார்.
இதன் பின்னர் பிரதமர் மோடி, டுப்ளின் நகரில் இந்தியர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். டப்ளின் நகரில் 26 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் வசிக்கின்றனர். இவர்கள் மருத்துவம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறையில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் விழா துவங்கும் முன்னர் இந்திய தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது.
பின்னர் அவர்களிடையே மோடி பேசியதாவது... அயர்லாந்து பிரதமரை சந்தித்ததில் எனக்கு பெருமகிழ்ச்சி. கலாச்சாரம் மற்றும் சுதந்திர போராட்டத்தை இந்தியாவும், அயர்லாந்தும் பகிர்ந்து கொள்கிறது. இந்தியா வலியுறுத்தியதால், உலக நாடுகள் சர்வதேச யோகா தினத்தை கொண்டாடுகின்றன. இந்நாளில் இந்தியாவின் வளர்ச்சியை பற்றி தான் உலகம் பேசி வருகிறது.
இளைஞர்கள் சக்தியால் தான் இந்திய வளர்ச்சியை எதிர்நோக்கி முன்னேறி வருகிறது. யாருக்கும் அடிபணிந்து போகும் நிலை இந்தியாவிற்கு இனி எக்காலத்திலும் ஏற்படாது. பிரிக்ஸ் அமைப்பின் முதுகெலும்பாக இந்தியா உள்ளது. இளைஞர் சக்தியால் பொருளாதார மற்றும் வளர்ச்சிக்கான சாவால்களை இந்தியா எதிர்கொள்ளும். இளைஞர்களை இந்தியா நம்புகிறது.
இளைஞர்களால் இந்தியா அதிக உயரத்திற்கு செல்லும். மீண்டும் இந்திய பிரதமர் அயர்லாந்து வர 60 ஆண்டுகள் ஆகாது என உறுதியளிக்கிறேன். யார் முன்பும் இந்தியர்கள் தலைகுனியாத நிலை உருவாகியுள்ளது. அயர்லாந்து குழந்தைகள் சமஸ்கிருத பாடல்களை பாடியது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த பாடலை இந்தியாவில் பாடியிருந்தால் பல கேள்விகள் எழ வாய்ப்பு உள்ளது. மதச்சார்பின்மை குறித்து பலர் கேள்வி கேட்டிருப்பார்கள் என மோடி கூறினார்.