ஹெச்.ஐ.விக்கு வாரம் ஒரு மாத்திரை போதுமா? - புதிய ஆய்வில் தகவல்
ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாரம் ஒரு மாத்திரை மட்டுமே தருகிற புதிய சிகிச்சை முறை பன்றிகளிடம் சோதிக்கப்பட்டதில் வெற்றிகரமான முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில் மனிதர்களிடம் சோதனை விரைவில் தொடங்கவுள்ளதாக அமெரிக்க விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
மெதுவாக மருந்துகளை விடுவிக்கும் இந்த மாத்திரைகள் நோயாளிகளுக்கு உதவும் எனவும் தினமும் மாத்திரை எடுத்துக்கொள்ளும் விஷயத்தில் இருந்து அவர்களுக்கு விடுதலை கிடைக்கும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது வழக்கமான சாதாரண குழல் மாத்திரை போன்றே தோற்றமளிக்கிறது. ஆனால் மாத்திரையை விழுங்கியதும் வயிற்றை அடையும்போது அதன் வெளிப்புறம் கரைந்துவிடுகிறது. இதையடுத்து கட்டமைக்கப்பட்ட மாத்திரையினுள் இருக்கும் சிறப்பு அமைப்பு திறந்து கொள்கிறது.
இந்த நான்கு செ.மீ (1.5 அங்குல) நட்சத்திர வடிவத்தில் கட்டமைக்கப்பட்ட சாரமானது வயிற்றில் ஏழு நாட்கள் இருக்கும். அது மருந்தை நிதானமாக வெளியே விடுகிறது. குரங்கு உட்பட பல்வேறு பாலூட்டிகளில் இந்த மருந்தைப் சோதனை செய்யவேண்டும் என்று பரிந்துரை செய்யப்படுகிறது. ஆனால் இன்னும் இரண்டு வருடங்களில் மனிதர்களுக்கு சோதனை செய்யப்படும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
ஹெச்.ஐ.வி நிபுணர்கள் கூறுகையில் ''இந்த புதிய சிகிச்சை வாய்ப்புகள் வரவேற்கப்படவேண்டியவை. ஆனால் இது ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பயன்பாட்டுக்கு வருவதற்கு இன்னும் நிறைய காலம் இருக்கிறது'' என்றனர்.
இந்த நட்சத்திர வடிவ சாரம் வயிற்றில் பெரிய அளவில் இருக்கும். ஆனால் உணவு சிறுகுடலில் பயணிப்பதை அனுமதிக்கும். தன்னிடம் உள்ள மருந்துகளை முழுவதுமாக வெளியேவிட்ட பிறகு சிதையத் தொடங்கும் இந்த நட்சத்திரம் செரிமானப் பாதை வழியாக வெளியேறிவிடும்.
பன்றிக்குச் செய்யப்பட்ட சோதனையில் ஆராய்ச்சியாளர்கள் டொலுட்கிரேவிர், ரில்பிவிரின், கபோட்டிகிரேவிர் ஆகியவை அடங்கிய மூன்று வைரஸ் எதிர்ப்பு மருந்துகளை கொடுத்தனர். ஆரய்ச்சியாளர்கள் கூறுகையில் இந்த வாய்வழி மருந்து விநியோக சாதனம் எதிர்காலத்தில் ஹெச் ஐ விக்கு மட்டுமின்றி பல்வேறு நோய்களுக்கும் பயன்படும் என தெரிவித்துள்னர்.
மெதுவாக வெளியிடுதல்:
மலேரியா மருந்தான இவர்மெக்டின் மூலம் ஏற்கனவே பன்றிகளுக்கு முதல் கட்ட சோதனையானது நடத்தப்பட்டிருக்கிறது . ''நோயாளிகள் தங்களுக்கான சிகிச்சைகளை எடுத்துக்கொள்வதை எளிமையாக்க நாங்கள் ஓர் அமைப்பை கொண்டுவர விரும்பினோம்'' என ஆராய்ச்சியாளர் ஜியோவன்னி டிராவெர்சோ கூறியுள்ளார்.
''மருந்தை மாற்றியமைப்பதால் ஒருநாளைக்கு ஒரு முறை மருந்து எடுப்பதற்கு பதிலாக ஒரு வாரத்திற்கு ஒரு முறை எடுத்தால் போதுமானதாக இருப்பது வசதியாகவும் இணக்கத்தை மேம்படுத்துவதாகவும் இருக்க வேண்டும் . மாதத்துக்கு ஒரு முறை மருந்து எடுப்பது கூட சில நோய்களுக்கு சாத்தியமாகலாம்'' என்றார் ஜியோவன்னி டிராவெர்சோ.
லிண்ட்ரா எனும் நிறுவனம் அடுத்த 12 மாதங்களுக்குள் மனிதர்களுக்கு நீண்ட காலம் நீடித்திருக்கும் வாய்வழியாக கொடுக்கப்படும் மருந்துகளை தயாரிப்பதற்கான தொழில்நுட்பங்கள் மற்றும் திட்டங்களை உருவாக்கிவருகிறது. ஹெச்.ஐ.வி மருந்துகளை கொண்ட சோதனைகள் நிறைய மிருக சோதனைகள் மற்றும் மனிதர்களுக்கு சோதனை நடத்துவதற்கான அனுமதி ஆகியவை கிடைத்தபின்னரே நடக்கும்.
இந்த வகையான மருந்துகள் டிமென்ஷியா, ஸிட்ஸோஃப்ரென்யா போன்ற மன நல கோளாறால் பாதிக்கப்பட்டவர்கள் போன்ற நிறைய வகை நோயாளிகளுக்கு பயன்படும் என்கிறார் மருத்துவர் டிராவெர்சோ. மேலும் ஏற்கனவே மெதுவாக வெளியிடும் மருந்துகள் ஊசி மூலமாக நோயாளிகளுக்கு கொடுக்கப்பட்டிருக்கின்றன என்றார்.
'' இந்த ஆராய்ச்சியின் வளர்ச்சி இன்னமும் ஆரம்ப நிலையில் தான் இருக்கிறது. பன்றிகளில் ஆராய்ச்சி செய்ததில் இருந்து நிறைய தூரம் செல்ல வேண்டியதிருக்கிறது, மேலும் மனிதர்களுக்கு கணித மாதிரி சோதனை செய்யப்படுவதற்கு முன்னால் அந்த மருந்தின் பயன் குறித்து அளவிடப்படவேண்டியுள்ளது'' என பிரிட்டிஷ் ஹெச்.ஐ.வி அமைப்பின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.
இந்த ஹெச்.ஐ.வி ஆராய்ச்சியானது தேசிய சுகாதர நிறுவனங்கள் மற்றும் பிரிகம் பெண்கள் மருத்துவமனை, பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் நிறுவனத்தின் நிதியில் இயங்கும் நேச்சர் கம்மியூனிகேஷன்ஸ் இதழில் வெளியிடப்பட்டது.
பிற செய்திகள்:
- ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்
- இந்தியா பற்றி என்ன சொல்கிறது உலக வங்கி? 6 முக்கிய தகவல்கள்
- இந்த பேச்சுவார்த்தைக்கான பெருமை டிரம்ப்பையே சேரும்: தென் கொரிய அதிபர்
- ஆஃப்கானிஸ்தானில் இந்த போதை மருந்தின் பெயர் மூக்குப்பொடி
- சௌதி அரேபியா: ஒருபாலின திருமணத்தில் கலந்துகொண்டவர்கள் கைது